அண்ணியாருக்கு அல்வா மாதிரி சீட்டு.. தோழர்களுக்கு வேட்டா? கடுகடு கம்யூனிஸ்ட்கள்! இழுபறியாகும் கூட்டணி
சென்னை: கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உறுதியாக இருந்த திமுக கூட்டணியில் சலசலப்பு எலத் தொடங்கி இருக்கிறது. தேமுதிக, காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுத்த திமுக தங்களை ஒதுக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர் கம்யூனிஸ்ட் கட்சிகள். மேலும் பொது வெளியிலும் போர் குரல் எழுப்பி இருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் இருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இருந்து செய்யப்பட்டு விட்டது. மேலும் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தொகுதி பங்கிட்டுக்கு ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் தேமுதிகவைக் காரணம் காட்டி கம்யூனிஸ்டுகள் போர்க்கொடி தூக்கி உள்ளதால், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியாக நீடித்து வருகின்றன.

திமுக கூட்டணி
இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்று கட்டமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு கட்டமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் திமுக தரப்பில், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதிகளை குறைத்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சி
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். நாங்கள் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். ஆனால் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்துள்ளதால் அதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்று திமுக கூறுகிறது.
காங்கிரஸ் கட்சி
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேமுதிக கட்சிக்கும் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகின்றன. இவர்களுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் போது இடதுசாரி கட்சிகளுக்கு மட்டும் மறுப்பது நியாயமில்லை. கடந்த முறை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு" என்றார்.
திமுக தரப்பு
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், "கடந்த முறை நாங்கள் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். தற்போது கூட்டணியில் அதிகமான கட்சிகள் இருப்பதால் ஒன்று குறைத்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பு கூறுகிறது. ஆனால் நாங்கள் ஏற்கெனவே இருந்த தொகுதிகளுடன் கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.
பாஜக
மேலும், நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் இடதுசாரி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என்றும், பாஜக மீண்டும் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்பதே தங்களின் முக்கிய இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications