முதல்வர்.. அமைச்சர்கள் மீது இரண்டாவது ஊழல் பட்டியல்.. ஆளுநரிடம் அளித்தது திமுக
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 22.12.2020 அன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுத்த முதல் கட்ட ஊழல் புகார் பட்டியலை தொடர்ந்து, ஸ்டாலின் கையொப்பமிட்ட இரண்டாவது கட்ட ஊழல் புகார் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தமிழக ஆளுநரிடம் அளித்தனர்.
Recommended Video
திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில். திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 22.12.2020 அன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது கொடுத்த முதல்கட்ட ஊழல் புகார் பட்டியலை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் கையொப்பமிட்ட இரண்டாவதுகட்ட ஊழல் புகார் பட்டியலை இன்று (19.2.2021), மாலை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஆகியோர் தமிழக ஆளுநரிடம் அளித்தனர்.
தமிழக ஆளுநரிடம், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்துவிட்டு, ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் ஊழல் தடுப்பு சட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர்மீது யாரேனும் ஊழல் செய்துள்ளார் என்று புகாரினை, ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம், ஊழல் செய்துள்ள அதிகாரியினை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் படைத்த உயர் அதிகாரியிடம், அடுத்தகட்ட விசாரணையை துவக்க அனுமதி பெறவேண்டும்.

பதவி நீக்கும் அதிகாரம்
ஆனால், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும், ஏமாற்றும் வகையிலும், அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் எந்த ஊழல் புகாரினையும், அவர்களை பதவி நீக்கும் அதிகாரம் படைத்த ஆளுநரிடம் அனுப்பி அனுமதி பெறுவதை தடுக்கும் வகையில் ஒரு அரசாணையை 19.12.2018 அன்று பிறப்பித்து உள்ளனர்.

புகார்கள் தள்ளுபடி
இந்த அரசாணையின் அடிப்படையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஊழல் புகாரினை தங்களுக்கு கீழ் பணிபுரியும் PUBLIC SECRETARY எனும் அரசு அதிகாரியிடம், ஊழல் தடுப்பு காவல் அதிகாரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுக்கப்படும் ஊழல் புகாரினை அனுப்பி FIR பதிவு செய்ய முன் அனுமதி பெறவேண்டும். இதன் மூலம் ஊழல் புகார்களை FIR பதிவு செய்யாமல், முறையான, சட்டப்படியான, விசாரணை இல்லாமல், புகார்களை தள்ளுபடி செய்துவிடுகின்றனர்.

மூட முயற்சி
இந்த மாதிரியான சட்டவிரோத விசாரணைகளில் ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஊழல் புகார்களை, தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும், தனக்கேற்ற அதிகாரிகளை நியமித்தும், சட்டவிரோதமாக ஊழல் புகார்களை மூடிவிடுகின்றனர் அல்லது மூடிவிட முயற்சிக்கின்றனர்.

ஆதாரங்கள்
ஆகவேதான், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில், முறையாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் நாங்கள் ஆதாரங்களுடன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்மீது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம்.

15 புகார்கள்
20.12.2020 அன்று 7 அமைச்சர்கள் மீது சட்டப்படியான, முறையான ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரங்களுடன் 15 புகார்களை ஆளுநரிடம் கொடுத்திருந்தோம். அன்று பத்திரிக்கையாளர்கள் மூலமாக இது முதல்கட்ட புகார்கள் என்றும், அடுத்தகட்ட புகார்களை ஆளுநரிடம் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். 'சொன்னதை செய்வோம்' என்பதன் அடிப்படையில், இன்று இரண்டாம் கட்ட புகாரினை முதலமைச்சர் மற்றும் நான்கு அமைச்சர்கள் மற்றும் ஒரு ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்மீது என ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் புகாரினை ஆளுநருக்கு கொடுத்துள்ளோம்." என துரைமுருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications