தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. மார்ச் 11ம் தேதி வரை நடத்த தடை.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடத்த மார்ச்11 ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடத்த மார்ச் 11 ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சிஏஏ சட்டத்திற்கு எதிர்த்தும் தலைமை செயலகத்தை நாளை முற்றுகை போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளது.
இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்க கோரி இந்திய மக்கள் மன்ற நிர்வாகி வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது காவல்துறை தரப்பில்,முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கோரி இஸ்லாமிய அமைப்புகள் அளித்த மனுவை காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்காமல் நிராகரித்திருப்பதாகவும், அமைதியான போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சட்டப்பேரவையை முற்றுகை என்பது சட்டவிரோதம் அதற்கு காவல்துறை அனுமதிக்காது என்றும் சிட்டி போலிஸ் சட்டத்தின் படி போராட்டங்கள் நடத்த சென்னை காவல் ஆணையர் தடை விதித்திருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், நாளை இஸ்லாமிய அமைப்புகள் நடத்த இருந்த தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு அனுமதியில்லை எனக் கூறி தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை, காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் மார்ச் 11 ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.