லோக்சபா தேர்தலுக்கு முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. தென் சென்னை நாதக வேட்பாளர் இவர்தான்!
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை சீமான் இன்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதிகளை நிர்ணயிப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி, தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அப்படியே தொடரவுள்ளது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள அதிமுக, சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை கட்டமைத்து வருகிறது. பாஜக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி, முதல் கட்சியாக வேட்பாளர் அறிவிப்பையே வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் இன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தென் சென்னை தொகுதிக்கான வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி என்பவரை அறிவித்துள்ளார் சீமான்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் இன்னும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை உறுதி செய்யாமல் உள்ள நிலையில் முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்திருக்கிறார் சீமான். அடுத்தடுத்து, மற்ற தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications