2026 சட்டசபை தேர்தலுக்கான 6 வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்.. வீரப்பன் மகளுக்கு சீட்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தார். முதற்கட்டமாக 6 வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. உறுப்பினர் சேர்க்கை, தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம், பூத் கமிட்டி கூட்டங்கள் என நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், 6 தொகுதிகளுக்கு இப்போதே வேட்பாளர்களை அறிவித்துள்ளார் சீமான்.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி சட்டசபைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நித்தியா அருண் போட்டியிடுவார் என்றும், வீரபாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ராஜேஷ் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமார் போட்டியிடுவார், கெங்கவள்ளியில் அபிராமி போட்டியிடுவார், ஆத்தூர் தொகுதியில் மோனிஷா சின்னத்துரை போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள இன எழுச்சி மாநாட்டில் மீதமுள்ள வேட்பாளர்களை அறிவிப்போம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னதாகப் பேசிய சீமான், எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். இப்போது மட்டுமல்ல 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம். 'தனித்து நிற்போம்.. தனித்துவத்தோடு நிற்போம்' இறைவன் மீது ஆணையாக எவரோடும் கூட்டணி கிடையாது. 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் போட்டியிடும் ஒரே கட்சி நாதக தான்.
திமுகவை எதிர்த்தால் பாஜக காசு கொடுக்கிறது, ஆர்எஸ்எஸ்யின் கைக்கூலி என்கிறார்கள். பாஜகவை எதிர்த்தால், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் கைக்கூலி என்கிறார்கள். அதிமுகவை எதிர்த்தால், திமுகவின் 'பி' டீம் என்கிறார்கள். திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை எதிர்த்தோம். தற்போதைக்கு தவெக தலைவர் தம்பி விஜயை நாங்கள் எதிர்க்கவில்லை. கேள்விகளை எழுப்பினால், விமர்சனம் என்று கூறுகிறார்கள்.
திமுகவின் 'பி' டீம், திமுக காசு கொடுக்கிறது என்று கூறுகின்றனர். அப்படிக் கூறும் நபர்கள், அந்த காசை வாங்கிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். நாம் நினைத்திருந்தால் எப்போதோ, யாருடனோ கூட்டணி வைத்து பதவிகளை பெற்றிருக்க முடியும். பாஜக தனியாக நிற்கட்டும், நானும் தனியாக நிற்கிறேன். என்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கட்டும் பார்க்கலாம். அதேபோல திமுகவும் என்னோடு போட்டியிடட்டும். ஆனால், ஓட்டுக்குக் காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications