போருக்கு ஆதரவாக முதன்முதலில் பேரணியை நடத்தியவர் ஸ்டாலின் தான்.. "பாஜக-திமுக கூட்டு” சீமான் அட்டாக்
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன் முதலில் பேரணி நடத்தியது முதல்வர் ஸ்டாலின் தான். அரசியல் லாபத்திற்காக பாஜக திமுகவுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சி.பா. ஆதித்தனார் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின் டெல்லிக்கு போனது ஏன்?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "பிரதமரை சந்திக்க தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தன. எண்ணற்ற சிக்கல்கள் நமக்கு வந்தபோது அவற்றை பிரதமரிடம் பேசி சரி செய்திருக்கலாம். 3 நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்த முதலமைச்சர், இந்த முறை மட்டும் அந்த கூட்டத்தில் பங்கேற்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப் போய் மோடியை சந்திக்கிறீர்கள்.
போருக்கு ஆதரவாக ஸ்டாலின் - சீமான்
அரசியல் லாபத்திற்காக பாஜக திமுகவுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறது.
இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன் முதலில் பேரணி நடத்தியது முதல்வர் ஸ்டாலின் தான். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களோ, பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட பேரணி நடத்தவில்லை. இந்தியாவின் பதில் தாக்குதலை ஆதரித்து சென்னையில் திமுக நடத்திய பேரணியில் அரசியல் உள்ளது. தமிழக முதலமைச்சர் மட்டும் பேரணி நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
போருக்கு ஆதரவாக பேரணியை நடத்திய முதலாவது நபர் ஸ்டாலின் தான். இந்தியா பாகிஸ்தான் போரில் என்ன நியாயம் இருக்கிறது? எத்தனை தீவிரவாதிகள் சுடப்பட்டனர்? இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை என்ன செய்தீர்கள்? நமது நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு எப்படி தைரியம் வந்தது?
சொந்த நாட்டு மக்களை
தாக்குதல் நடத்தும் எண்ணம் வந்தாலே கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்திருந்தால், அந்த சிந்தனை அங்கேயே செத்து இருக்கும். புல்வாமா தாக்குதல் ஒரு படிப்பினை இல்லையா? பஹல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா? சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியவில்லை. புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் நடத்திய பேரணி
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் நடந்தன. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். இதையடுத்து மோதல்கள் நடந்தன. பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று போரை முடிவுக்கு கொண்டு வந்தன.
இதற்கிடையே பாகிஸ்தானை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவப்படைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததோடு, தமிழ்நாடு சார்பில் பேரணி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி மே 7 ஆம் தேதி மெரினா காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முப்படை வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications