“என்னை முதல்வர் ஆக்காம ஓயமாட்டாங்க.. ஸ்டாலின் அப்பாவுக்கு வாழ்த்துகள்”.. பிரஸ் மீட்டில் சீறிய சீமான்
சென்னை: கருணாநிதி பலமுறை சிறையில் அடைத்து தன்னை தலைவராக்கினார் என்றும், அப்பாவும், மகனும் மீண்டும் சிறையில் அடைத்து தன்னை முதல்வராக்கிவிட்டு தான் செல்வார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

சீமானுக்கு சம்மன்
இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் அனுப்பிய சம்மனில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வியாழக்கிழமை மீண்டும் சம்மன் ஒட்டப்பட்டது. அதில், பிப்ரவரி 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்தெறிந்தார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மற்றும் போலீஸார் சீமான் வீட்டுக்குச் சென்றனர். சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ், போலீசாரை தடுத்து நிறுத்த முயற்சித்தார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சீமானிடம் 1.15 மணி நேரம் விசாரணை
இதைத்தொடர்ந்து, நீலாங்கரை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசார் பாதுகாவலர் அமல்ராஜை இழுத்துச் சென்று, வண்டியில் ஏற்றினர். அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் போலீசார் நேற்று இரவு சுமார் 1.15 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் வெளியே வந்த சீமான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
போலீசுக்கு அழுத்தம்
அப்போது பேசிய அவர், "மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன். விசாரணையில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளையே போலீசார் கேட்டனர். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார்.
3 மாத காலம் அவகாசம் இருந்த நிலையில் 3 நாட்களில் விசாரணையை முடிக்க நினைத்தது ஏன்? காவல் துறையினருக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் இருக்கிறது. எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.
எனது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு தான் பின்னடைவு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த பிரச்சனை மீண்டும் வந்தது. வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை கிழித்தால் கைது செய்வீர்களா? சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்?
என்னை முதலமைச்சர் ஆக்கிவிட்டுத்தான்
கருணாநிதி பலமுறை சிறையில் அடைத்து என்னை தலைவராக்கினார். இப்போது, அப்பாவும், மகனும் சிறையில் அடைத்து முதல்வராக்கிவிட்டு தான் செல்வார்கள். பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது நான் வந்தால் செய்தியில் யாரை போடுவது என்ற சூழல் ஏற்படும். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசும் வரை இருந்துவிட்டு பிறகு என்னை காவல்நிலையத்திற்கு போலீசார் வர சொன்னார்கள். ஸ்டாலின் 'அப்பா'வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று சீமான் தெரிவித்தார்.
முன்னதாக, போலீஸ் விசாரணைக்கு சீமான் ஆஜரான நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர். பாதுகாப்பு கருதி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவல் நிலையத்துக்குள் சீமான் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனைக் கண்டித்து நாதக நிர்வாகிகள் கண்டன குரல் எழுப்பியதால் இரவு நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications