ரூ100 கோடியில் பெரியாருக்கு சிலை ஏன்? பெருமைக்கு எருமை மேய்ப்பதைப் போல, அதிகாரத் திமிர்-சீமான் சாடல்
சென்னை: பெரியார் ஈ.வே.ராவுக்கு ரூ100 கோடியில் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார். மேலும் பெரியார் உயிரோடு இருந்திருந்தால் தன் கைத்தடியாலேயே இந்த அறிவிப்பை அறிவித்தவர்களை விரட்டியடித்திருப்பார் என்றும் சீமான் கூறினார்.
Recommended Video
சென்னையில் வ.உ.சி..150வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது மேலானது என்பதற்காக போராடியவர் வ.உ.சிதம்பரனார். நாட்டின் மிக மிக முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார். மாடு கூட இழுக்க திணறுகிற செக்கை மண்ணின் விடுதலைக்காக இழுத்தவர் வ.உ.சி. நாங்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அந்த அறைக்குப் பக்கத்தில்தா அன்று வ.உ.சி.யும் அடைக்கப்பட்டிருந்தார்.

வ.உ.சி.யின் பெருந்தியாகம்
இன்று நாங்கள் பேசுகிற தற்சார்பு பொருளாதாரத்தை அன்றே கடைபிடித்தவர் வ.உ.சி. வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்தார். முன்னோர்களின் தமிழ் ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்தார். தமிழ் நேசன் என்ற பெயரிலேயே ஒரு இதழ் நடத்தினார். மண்ணின் மக்களின் மானம் கப்பலேறக் கூடாது என்பதற்காக சொத்துகளை விற்று கப்பல் வாங்கி ஓட்டியவர் வ.உ.சி. அவர் செய்த தியாகங்களுக்கு இணையானது எதுவும் இல்லை. அந்த பெருந்தலைவன் பிள்ளைகள் அனுபவிக்க முடியாத பதவிகளை இன்று யார் யாரோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் எதிர்ப்பு
ஆனால் இன்று எங்கள் மண்ணின் வளம் கொள்ளை போகிறது; களவு போகிறது. அத்தனையும் எங்கள் கண்முன்னாடியே நடக்கிறது. இதையெல்லாம் தடுக்கிற அரசியல் வலிமை எங்களுக்கு தேவையானதாகவும் இருக்கிறது. திராவிட களஞ்சியம் விவகாரத்தில் யார் குழப்பியது? திராவிடரால் இங்கு எந்த அரசியலும் இல்லை. தமிழர் அல்லாமல் இங்கு அரசியல் இல்லை. ஆரியத்துக்கு எதிரான கருத்தியல் திராவிடம் என்றால் இங்கே இந்த நிலத்தில் திராவிடம் குறித்து யாரும் பாடாவில்லை. இந்த நிலத்துக்கு உரிமை கொண்டாட தமிழர் இனத்துக்கு மட்டுமே உரிமை உண்டு என்கிரார் அம்பேத்கர்.

இந்திய நிலமும் நாகர்களும்
இந்திய நிலப்பரப்பு முழுவதும் தமிழர்களின் மூதாதையராகிய நாகர்கள் வாழ்ந்தனர் என்கிறார் அம்பேத்கர். ஆம் இதனை நான் ஏற்கிறேன் என்று மறைந்த இடதுசாரித் தலைவர் ஜோதிபாசும் கூறியிருக்கிறார். தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் என்கின்றனர் ஹார்வார்ட் பல்கலைக் கழக பேராசிரியர்கள். இவ்வளவு பெரிய மூத்த இனத்தை திராவிடம் என அடையாளப்படுத்துவது எப்படி சரியாகும்? ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் என முத்துராமலிங்கத்தேவர் அன்றே சொல்லி வைத்திருக்கிறார். ஆரியமும் திராவிடமும் ஒருநாள் கை குலுக்கி சங்கமிக்கும் என்றார் முத்துராமலிங்கத் தேவர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாகப் போட்டியிடும். கடந்த தேர்தலில் 12% வாக்குகளைப் பெற்றிருந்தோம். இம்முறை அதைவிட கூடுதல் வாக்குகளைப் பெறுவோம். இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். பள்ளி கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்திருக்கிறார்கள். அதனை வரவேற்கிறோம். சட்டசபைக்குள் குட்கா கொண்டு போனவர்கள் குவார்ட்டர் பாட்டியலையும் கொண்டு போய் இருக்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை எப்போதுதான் மூடுவார்களோ? அதையும் பற்றி பேசித்தானே ஆகவேண்டும். ஆனால் பேசமாட்டார்கள்.

மதுபான கடைகளை மூடலையே?
திமுக ஏதோ முதன் முதலாக ஆட்சிக்கு வருவது போல தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்கிறது. நாங்கள் எங்கள் வரைவு அறிக்கையில் கூறியிருப்பதைத்தான் திமுக இப்போது சொல்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த போது ஏன் இதனை செய்யாமல் விட்டீர்கள்? என்றால் அந்த கேள்விக்கு பதில் இல்லை. இத்தனை ஆண்டுகள் செய்யாமல் ஸ்டேட் பேங்க் தமிழ்நாடு ஆரம்பிப்போம் என்கின்றனர். தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்காமல் இருப்பது ஏன்? ஆந்திராவிலும் கேரளாவிலும் திறந்திருக்கிறார்களே.. இங்கே கள்ளு கடைகள் திறந்தால் மதுபான தயாரிப்பு ஆலைகள் முதலாளிகள் பாதிக்கப்படுவர்கள். இங்கு முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. சாராய அதிபர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பெரியார் சிலை விவகாரம்
பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். பெரியார் பொதுமக்களிடம் நிதி சேகரித்து பள்ளி, கல்லூரிகளை உருவாக்கினார். இன்று அவை யாரிடம் இருக்கிறது உங்களுக்கு தெரியும். மக்களின் வறுமையை போக்க பாடுபட்ட சீர்திருத்தவாதி பெரியாருக்கு ரூ100 கோடியில் எதற்கு சிலை? பெரியாருக்கு தமிழகத்தில் அளாவுக்கு அதிகமாகவே சிலைகல் வைக்கப்பட்டுள்ளன. அங்கே வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி சிலை அமைப்பதற்கும் நீங்கள் பெரியாருக்கு சிலை அமைப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்ன தேவை? கிராமங்களில் சொல்வார்களே.. பெருமைக்கு எருமை மேய்ப்பது போலத்தான் இருக்கு. இதுக்கு பேரு பணக்கொழுப்பு. அதிகாரத் திமிர். இதனை ஐயா பெரியார் இருந்தால் விரும்புவாரா? என கேட்க விரும்புகிறேன். பெரியார் தன் கைத்தடியாலேயே விரட்டி விரட்டி அடித்திருப்பார். இதையெல்லாம் பேசினால் ஆ... திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.. திராவிடம் என்றால் எரிகிறது என்பார்கள்.. திராவிடம் என்றால் எரியத்தான் செய்யும்.. வேறு என்ன செய்யும்? உங்களுக்குத்தானே எரியும். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications