கூட்டணிக்கான அழைப்புகள் வந்தன.. ஆனாலும் தனித்தே போட்டி.. ஏன் தெரியுமா?.. சீமானின் சூப்பர் விளக்கம்
சென்னை: மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வு செய்தார்.
பெண்களுக்கு ஒவ்வொரு சட்டசபைத் தேர்தலிலும் சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான் இந்த தேர்தலில் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சீமான் அறிமுகப்படுத்தினார்.
தமிழகத்தில் வேலை
அப்போது அவர் பேசுகையில் தமிழ் படித்தால் தான் தமிழகத்தில் வேலை அளிக்கப்படும். தமிழ் பயிற்றுமொழி, ஆங்கிலம் கட்டாய பாட மொழி, உலகில் எந்த மொழியையும் எங்கள் விருப்ப மொழிதான். ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை.
ஆணும் பெண்ணும் சமம்
பெண்களுக்கு 50 சதவீதம் கொடுப்பது எங்கள் கடமை. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை. அரசியலை லாபம் பெறும் தொழிலாக,கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது.
லஞ்சம்
ஊழல், லஞ்சத்தை ஒழிக்கவே யாருடனும் கூட்டணி வைக்கவில்லை என்றார் சீமான். நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் அல்லது அமமுகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சீமான் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நிறுத்திவிட்டு தற்போது திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதியில் அவர் நிற்கிறார்.
சீமான் வெற்றி
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, "நான் தமிழன். அதனால்தான் நாம் தமிழர் மேடையில் நிற்கிறேன். சீமான் பேச்சாளர் மட்டும் அல்ல, செயல்படுவார். அவர் யாராலும் தடுக்க முடியாத தனி சக்தி. சீமான் வெற்றி பெருவார், எங்களை நாங்களே ஆள்வோம்" என்றார் பாரதிராஜா.