கொஞ்சநஞ்ச பேச்சா..திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு..! கையில் லத்தியுடன் டிஐஜி வருண்குமார் IPS
சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இன்று நாம் தமிழர் கட்சியினர் கொத்து கொத்தாக திமுகவில் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில் திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா என பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார் டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ். சீமானைத் தான் குறிப்பிட்டு அவர் பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து சில கருத்துக்களை பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சீமானின் வீடு இன்று முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.
இதை அடுத்து சீமான் வீடு உள்ள நீலாங்கரை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க சீமான் வீட்டின் முன் நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணியினர் கையில் உருட்டு கட்டைகளுடன் திரண்டனர். இதனையடுத்து அனுமதி இன்றி உருட்டு கட்டைகளுடன் கூடியதாக சீமான் மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சியினர் கொத்து கொத்தாக கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். உச்சமாக இன்று மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பிரபாகரனுடன் சீமான் இருந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியதும் சீமானுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக அடுத்தடுத்து சீமானுக்கு சிக்கல் வரும் நிலையில் ஐபிஎஸ் அதிகாரியும் திருச்சி டிஐஜியுமான வருண்குமாரும் அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வருண்குமார் ஐபிஎஸ் சீமான் இடையே வார்த்தை போர் நடந்து வரும் நிலையில் தனது குடும்பத்தினரை அவதூறாக சித்தரித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள அந்த வழக்கில் தான் சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் இன் பேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,” கொஞ்சநஞ்சம் பேச்சா.. திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்..” என கையில் லத்தியுடன் பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை குறிப்பிட்டு தான் டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் தனிப்பட்ட பிரச்சனை என்றால் நீதிமன்றம் மூலம் தான் தீர்வு காண வேண்டும். அரசின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பொதுவெளியில் மிரட்டுவது போல் பதிவிடக் கூடாது என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications