அண்ணனை மறந்துட்டிங்க பாத்தீங்களா? பறிபோகும் சீமானின் அங்கீகாரம்! ’விவசாயி’ நாதகவுக்கு கிடைக்குமா?
சென்னை: தமிழக அரசியலில் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தனித்து களம் கண்டு வந்த நாம் தமிழர் கட்சி, இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாததுடன், கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது வாக்கு சதவீதமும் 4% என்ற அளவுக்கு குறைந்திருப்பதோடு, சீமான் டெபாசிட்டை இழந்திருப்பது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தனித்த அரசியல் பாதையில் பயணம் செய்து வருகிறது. எந்த பெரிய கூட்டணியிலும் சேராமல், தொடர்ந்து தனித்தே தேர்தலை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் குறைந்த அளவு வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை படிப்படியாக உயர்த்திக் கொண்டே வந்தது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி சுமார் ஒரு சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்றது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதம் மெதுவாக உயர்ந்தது. குறிப்பாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று பல இடங்களில் முக்கிய கட்சிகளுக்கு சவாலாக மாறியது.
நாம் தமிழர் கட்சி
இதைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஒரு அரசியல் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல. தேர்தல் ஆணையம் இதற்காக குறிப்பிட்ட விதிமுறைகளை வைத்துள்ளது. ஒரு மாநிலத்தில் 8 வாக்கு சதவீதத்தைப் பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ததால் தான் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தது.
விவசாயி சின்னம்
அந்த அங்கீகாரம் கிடைத்த பிறகு கட்சிக்கு நிரந்தர தேர்தல் சின்னமாக ஏர்கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் கிடைத்தது. அதனால் தேர்தல் பிரசாரங்களில் நாதகவும் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும் நிலைமை தலைகீழாக மாறியது. நாதக ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. அதைவிட அதிர்ச்சியாக, சீமான் டெபாசிட் இழந்ததோடு, 4 % என வாக்கு சதவீதமும் குறைந்துவிட்டது. இதனால் அக்கட்சிக்கான மாநில கட்சி அங்கீகாரம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது.
தேர்தல் ஆணையம்
ஆனால் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, ஒரே தேர்தலில் வாக்கு குறைந்துவிட்டது என்பதற்காக உடனடியாக மாநில கட்சி அந்தஸ்து ரத்து செய்யப்படாது. பொதுவாக அடுத்த பெரிய தேர்தல் வரை கட்சிக்கு அவகாசம் வழங்கப்படும். அதாவது அடுத்த மக்களவைத் தேர்தல் வரை நாம் தமிழர் கட்சிக்கு தற்போதைய அங்கீகாரம் தொடரும் வாய்ப்பு உள்ளது. எனினும் அடுத்த தேர்தல் அந்தக் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அப்போது மீண்டும் தேவையான அளவு வாக்குகளைப் பெற வேண்டும்.
மாநில கட்சி அந்தஸ்து
இல்லையெனில் மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயம் உருவாகும். அதனால் இனி வரும் காலங்களில் கட்சியின் அரசியல் நகர்வுகள் மிகவும் கவனிக்கப்படுகின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சமூக வலைதள ஆதரவு மட்டும் போதாது, வாக்கு அரசியலிலும் வலிமையாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
மாநில கட்சி அங்கீகாரம்
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவாக்கிய ஆதரவை வாக்குகளாக மாற்றும் சவால் மீண்டும் சீமான் தலைமையிலான கட்சிக்கு முன் நிற்கிறது. அதே நேரத்தில், தொடர்ந்து தனித்த அரசியல் பாதையைத் தேர்வு செய்து வரும் நாம் தமிழர் கட்சி அடுத்த கட்டமாக கூட்டணி அரசியலுக்கு செல்லுமா அல்லது மீண்டும் தனித்துப் போட்டியிடுமா என்பதும் அரசியல் வட்டாரங்களில் பெரிய கேள்வியாக உள்ளது. தற்போது மாநில கட்சி அங்கீகாரம் நாதகவுக்கு நீடித்தாலும், அதை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications