நாம் தமிழர் உறவுகளின் குரலை "முடக்க நினைக்கும்" திமுக அரசின் வெறுங்கனவு பலிக்காது.. சீமான் ஆவேசம்
சென்னை: மதுபானக் கடைகளை மூடக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய நாம் தமிழர் கட்சியினர் 120 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பது மக்கள் விரோத அரசியல் போக்காகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள இப்பேரிடர் காலத்தில் மதுபானக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி வெற்றிக்குமரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய பெண்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

நாம் தமிழர் குரலை முடக்க முடியாது
இத்தகைய அடக்குமுறைகள் மூலம் மண்ணுக்கும் மக்களுக்குமானப் போராட்டக் களத்தில் ஓங்கி ஒலிக்கும் நாம் தமிழர் உறவுகளின் குரலை முடக்கிவிடலாம் எனும் திமுக அரசின் வெறுங்கனவு ஒருபோதும் நிறைவேறாது.

அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் கண்டித்தார்
கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரோனா பரவலைக் காரணம்காட்டி, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடிய ஸ்டாலின் அவர்கள், தற்போது முதல்வரானதும் அதிமுக-வின் அடியொற்றி மதுபானக் கடைகள் திறப்பதும், அதற்கு எதிராகப் போராடிய நாம் தமிழர் உறவுகள் மீதும் பொய் வழக்குத் தொடுப்பதும் மக்கள் விரோத அரசியல் போக்காகும்.

ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறை
மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை அனைவரையும் ஏற்க செய்யும் பொருட்டு அறவழியில் போராடுபவர்கள் மீது வழக்கு தொடுத்து அச்சுறுத்தி அடக்குமுறைக்குள்ளாக்குவது சனநாயகத்திற்கு எதிரானது.

வழக்கு திரும்பப் பெற வேண்டும்
ஆகவே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி போராடிய நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் மதுபானக்கடைகளின் திறப்பிற்கு எதிராக நாடெங்கிலும் எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரும்வரையாவது மதுபானக்கடைகள் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications