சங்கத் தமிழ் இலக்கியங்களை 'திராவிடக் களஞ்சியம்' என தொகுப்பதா? தமிழக அரசுக்கு சீமான் கடும் எதிர்ப்பு
சென்னை: சங்கத் தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என தொகுக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: சங்கத் தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றுக்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என அடையாளம் மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கு எதிரான மிகப் பெரும் மோசடித்தனமாகும்.

மனு ஸ்மிருதியில் இருந்து எடுத்தாளப்பட்ட திராவிடம் என்பதைக் கொண்டு ஆரியத்துக்கு நேரெதிராக தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ் மொழியையும் தமிழ்ப் பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கு எதிராக கருத்தியல் பரப்புரையும் அரசியல் போரும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தமிழின் தொன்மக் களஞ்சியங்களும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத திராவிடம் எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களை குறிப்பிடும் திராவிட திருட்டுத்தனம் வெட்கக் கேடானது!
ஆகவே சங்கத் தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாக கைவிட்டு அவற்றை தமிழ்க் களஞ்சியம் என்றே குறிக்க வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications