Seeman: பாலியல் குற்றவாளிகளை நிற்க வைத்து சுடுவேன்! தேர்தல் அறிக்கை வெளியீட்டில் சீமான் பேச்சு
சென்னை: பாலியல் குற்றங்கள் செய்பவர்களை நிற்க வைத்து சுடுவேன் என்றும் குற்றங்களை எல்லா திசையில் இருந்தும் கண்காணிப்பேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியினர் மட்டும் அறிவித்துள்ளனர். அந்த வகையில் 117 பெண்கள், 117 ஆண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், பாலியல் குற்றங்கள் செய்பவர்களை நிற்க வைத்து சுடுவேன் என்றும் குற்றங்களை எல்லா திசையில் இருந்தும் கண்காணிப்பேன் என தெரிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் நாதக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு தனித்தொகுதி, தமிழக தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும். தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும். அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும், பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்படும்.
அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும். நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கவும், கரையை வலிமைப்படுத்தவும் ஆல், அரசு, பனை, புங்கை, பூவரசு, மூங்கில், வேம்பு, புளி போன்ற மரங்கள் நடப்படும்.
புதிய கண்மாய்கள், ஏரிகள் உருவாக்கப்படும். நாம் தமிழர் கட்சி தண்ணீர் வணிகத்திற்கு தடைவிதிக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் அரசே தூய குடிநீர் கொடுக்கும். குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும். தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்.
மருத்துவப்படிப்பு தூய தமிழ்மொழியில் நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் மாவட்டம் தோறும் தொடங்கப்படும். கட்டணமில்லா தங்கும் விடுதிகள் வசதி வழங்கப்படும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சி திடல்கள், பயிற்சியாளர்கள் ஊராட்சி அளவிலேயே அமர்த்தப்படுவார்கள். விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படும். பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை, ஆண் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை என்று மாற்றியமைக்கப்படும்.
படிப்படியாக ஓராண்டிற்குள் மது ஒழிக்கப்படும். ஆவணப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரப்படும். சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்குடிமக்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications