எல்லாருமே ஸ்லீப்பர் செல்கள்! நாங்கள்தான் வேறு கட்சிக்கு அனுப்புகிறோம்! சீமான் கலகல
சென்னை: கட்சியில் இருந்து விலகுவோர் எல்லாரும் ஸ்லீப்பர் செல்கள், வேறு கட்சியில் சேர்ந்து எங்களுக்கு உளவு பார்ப்பதற்காக நாங்கள்தான் அனுப்பி வைக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சீமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்த போது அவரை சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார்.

சீமான், "பச்சை தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும். எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் எங்கள் மண்ணை ஆள விட மாட்டோம்" என்றெல்லாம் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ரஜினி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்ற கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவித்தார்.
இதற்கு பின்னர்தான் ரஜினியை விமர்சிப்பதை சீமான் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் அரசியலு்கு வருவதாக விஜய் சொன்னதும் அவரை வரவேற்றார். அவர் உடன்பிறவா தம்பி என மூச்சுக்கு முன்னூறு தடவை கூறி வந்தார்.
இந்த நிலையில் விஜய் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றதும், சீமான் விஜய்யை கையாளும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டது. விஜய்யுடன் கூட்டணி என்றெல்லாம் கூறி வந்த சீமான், அந்த மாநாட்டுக்கு பிறகு விஜய்யை கடுமையாக விமர்சித்தார். லாரியில் மோதி சாக வேண்டும் என்றெல்லாம் மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
தமிழ் தேசியமும் திராவிடமும் இரு கண்கள் என விஜய் கூறியது தவறு என சீமான் விமர்சித்தார். இப்படிப்பட்ட நிலையில் ரஜினிகாந்தை சீமான் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஜினியை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என இருந்தேன். அன்பான மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிவராது. அரசியலில் அவதூறுகள் எல்லாவற்றையும் தாங்க வேண்டும்.
களத்தில் நேர்மையாக இருப்பது நிறைய கஷ்டம். நேர்மையாக வாழ்வது உள்ளங்கையில் நெருப்பு துண்டை வைத்திருப்பதற்கு சமமானது. நடிகர் ரஜினியுடன் நிறைய பேசினேன். அனைத்தையும் பகிர முடியாது. ரஜினியுடன் இரண்டரை மணி நேரம் பேசினேன். தற்போதைய அரசியல் சூழல், சினிமா உள்ளிட்டவை குறித்தெல்லாம் பேசினோம்.
நான் தனித்து போட்டியிடுவது குறித்து அவர் என்னை பாராட்டினார். தனித்து போட்டியிடுவது சாதாரண விஷயம் அல்ல என கூறினார். இப்படியே பயணியுங்கள் என்றார். ரஜினிக்கு அரசியல் மீது ஆர்வம் உள்ளது. ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது. விமர்சனத்தை கடக்க இயலாதவர்கள், விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க இயலாதவர்கள் அற்ப வெற்றியை கூட அடைய முடியாது.
சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். பிரதமரை காலையில் அப்பாவும் மாலை மகனும் சந்திக்கிறார்கள். இது எதற்கு என கேட்டால் சொல்வதில்லை. ஆனால் நான் ரஜினிகாந்தை எதற்காக சந்தித்தேன் என்பதை விளக்கமாக சொல்கிறேனே! என்றார்.
உங்கள் கட்சியில் இருந்து நிறைய தொண்டர்கள் விலகுகிறார்களே என்ற கேள்விக்கு சீமான் கூறுகையில், நாங்கள்தான் அனுப்பி வைக்கிறோம். வெவ்வேறு இயக்கங்களில் போய் சேர்ந்து எங்களுக்காக உளவு பார்க்க அனுப்பி வைக்கிறோம். எங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக அனுப்பி வைக்கிறோம் என சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications