நடிச்சா ஹீரோதான்.. அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரில் எல்லாம் நடிக்க மாட்டார்.. ரஜினியை வாரிய சீமான்
சென்னை: தமிழகத்தில் தேர்தலை மனதில் வைத்தே ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என சீமான் குற்றச்சாட்டியுள்ளார்.
வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரேஷன் அரிசி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ 2500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் விதமாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டங்கள் மூலம் விளைவிக்கும் பயிர் என்பதை முதலாளிகள் தீர்மானிக்கும் நிலை உருவாகும்.

விவசாயிகள்
இந்த சட்டங்கள் நல்லது என பேசும் மத்திய அரசு, இதனால் பாதிப்பு ஏற்பட்டால் பொறுப்பேற்க முடியாது என கூறுவது என்ன அர்த்தம்? இந்த சட்டம் நிச்சயம் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பேராபத்தை விளைவிக்கும். விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாலேயே நாங்கள் இச்சட்டங்களை எதிர்க்கிறோம்.

ரத்து
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்யவேண்டாம். திரும்பப்பெற வேண்டும். தற்போது தேர்தல் வருவதால் அதை மனதில் வைத்து பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ 2,500 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேர்தல் பொங்கல் தான். அதில் சந்தேகமே இல்லை.

ரஜினிகாந்த்
அமெரிக்கா போன்ற நாடுகளே ஓட்டுச் சீட்டு மூலம் தேர்தலை நடத்தும்போது இந்தியாவில் மட்டும் மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ரஜினிகாந்த் அரசியல் செய்யமாட்டார். நேராக தேர்தலை சந்திப்பார். அவர் நடித்தால் ஹீரோதான். அமெரிக்க மாப்பிள்ளை போன்ற கதாபாத்திரங்களை அவர் ஏற்க மாட்டார் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications