நடிகை விஜயலட்சுமியிடம் ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ்.. வீரலட்சுமிக்கும் அனுப்பிய வக்கீல்
சென்னை: பாலியல் புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸை வீரலட்சுமிக்கும் அனுப்பியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்த போதிலிருந்தே சீமானுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகவும் ஆனால் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் விஜயலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் இரு தரப்பினரும் அவதூறு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
அவருடன் தமிழர் முன்னேற்ற படை அமைப்பை சேர்ந்த வீரலட்சுமியும் வந்திருந்தார். விஜயலட்சுமிக்கு தேவையான உதவிகளை வீரலட்சுமி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த புகார் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் அதெல்லாம் கேவலம், அதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார்.
மேலும் விஜயலட்சுமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலே கொந்தளிக்கும் சீமான் ஒரு கட்டத்தில் நானும் விஜயலட்சுமியும் திருமணம் செய்திருந்தால் அதற்கான ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள். லட்சியத்துடன் பயணிக்கும் என் அரசியல் பணிகளை இரு லட்சுமிகளும் முடக்க பார்க்கிறார்கள் என்றார்.
இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவருடைய புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் சீமானின் நீலாங்கரை வீட்டுக்கு நேரில் சென்ற போலீஸார் அவரிடம் சம்மன் கொடுக்க முயன்றனர். ஆனால் அதை அவர் வாங்கவில்லை. இதனால் போலீஸார் அந்த சம்மனை வீட்டு வாசலில் ஒட்டி வைத்துவிட்டு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமிக்கு ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னை பற்றி பொதுவெளியில் அவதூறாக பேசிய நடிகை விஜயலட்சுமி, அவருக்கு துணையாக நிற்கும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பை சேர்ந்த வீரலட்சுமி ஆகிய இருவருக்கும் ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸை சீமானின் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமிக்கு பெங்களூர் முகவரிக்கும் வீரலட்சுமிக்கு அவரது ராமாபுரம் வீட்டு முகவரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் இருவர் மீதும் வழக்கு தொடர போவதாக சீமான் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications