"ராமர் கோவிலுக்கு மார்க்கெட் போனதால் முருகனை தொட்டுப் பார்க்கிறார்கள்”.. பாஜக மீது சீமான் தாக்கு!
சென்னை: "ராமருக்கு மார்க்கெட் போய்விட்டது அதனால்தான் முருகனிடம் வருகிறார்கள். தமிழர்களுக்கு இறை வழிபாட்டை பா.ஜ.க சொல்லித் தருவது வேடிக்கையாக உள்ளது. அவர்களுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்." என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றி வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.
சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக பாஜக - தமிழக அரசு இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விவகாரம் குறித்துக் காட்டமாகப் பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், "பல கோடி மக்கள் வீடுகளில் விளக்கேற்ற வழி இல்லாமல் உள்ளனர். ஆனால், பா.ஜ.க திருப்பரங்குன்றம் மலை மேல் விளக்கு ஏற்ற வேண்டும் என்கின்றனர். இவர்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தார்கள். இந்த மலையை கல்குவாரியாக மாற்ற உத்தரவு பிறப்பித்தால் போராட வருவார்களா?
இன்றைக்குthதான் முருகன் இவர்கள் கண்ணுக்கு தெரிகிறாரா? இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள்? கடந்த ஆண்டு ஏன் வரவில்லை? 2 மாத்தில் தேர்தல் வருவதால் வருகின்றனர். ஒருங்கிணைந்த சமூகத்தை சேரவிடாமல் பிரித்து விடுவதுதான் பா.ஜ.கவின் கோட்பாடு. திடீரென்று விளக்கு ஏற்றுவோம் என்பது தமிழ் சமூகத்திற்கு உள்ளே பிளவுகளை ஏற்படுத்தக்கூடியது. பா.ஜ.க ஒற்றுமையாக இருக்கும் மக்களை பிரிக்க பார்க்கிறது.
இந்த விவகாரத்தில் அரசு கவனக்குறைவாக இருந்தது. இவர்களுக்கு தெரியாமலேயா இதெல்லாம் நடக்குது? தமிழக அரசு நினைத்திருந்தால் எப்போதோ இதை தடுத்து இருக்கலாம். ராமருக்கு மார்க்கெட் போய்விட்டது அதனால்தான் முருகனிடம் வருகிறார்கள். தமிழர்களுக்கு இறை வழிபாட்டை பா.ஜ.க சொல்லித் தருவது வேடிக்கையாக உள்ளது. அவர்களுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
திடீரென ஒருவர் வந்து நான் போராடுவேன், அதற்கு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து போய் தீபம் ஏற்றுங்க எனச் சொல்வது வருத்தமாக இருக்கிறது. நாட்டை நிர்வகிப்பது நீதிமன்றமா, சட்டமன்றமா? ஒரு அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை வந்தால், ஒரு பெரிய கலவரம் நடந்தால் பொறுப்பு அரசு ஏற்குமா, நீதிமன்றம் ஏற்குமா? நீதிபதிகளை நியமிப்பது யார்? நியமிக்கும் ஆட்சியாளர்களுக்காகப் பேசுவீர்களா, கீழே இருக்கும் மக்களுக்காகப் பேசுவீர்களா?
தமிழ்நாட்டில் சாதி, மத பிளவு ஏற்படுத்துவது சாத்தியம் இல்லை. அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துவிட்டு இதுகுறித்து எதிர்த்து பேசுவார்களா? கூட்டணி வைத்துக்கொண்டு பா.ஜ.கவுக்கு எதிராக சொல்ல வேண்டும் என்றால் எஜமான்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?
மத்திய அமைச்சர் அமித்ஷா இந்திய மக்களின் ஒற்றுமை என பேசாமல் இந்து மக்களின் ஒற்றுமை என பேசுகிறார். அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பா.ஜ.க. தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது என்றால் பேராபத்து இருக்கிறது என அர்த்தம்.
பல இந்துக்களுக்கு ஒரு வேளை சோறே 100 ஆண்டுக்கு மேல் கனவாக இருக்கிறது. நாட்டில் ஆளுகிற ஒரு கட்சி, இந்து மக்களின் கனவு என்று பேசுகிறது. இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு எப்படி ஆளுகின்ற கட்சி சொல்ல முடியும். இந்திய மக்களின் ஒற்றுமை என்று தானே பேச வேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications