பாஜகவுடன் கூட்டணி.. எடப்பாடி பழனிசாமிக்கு தேவையில்லாத சுமை.. கணக்கு தவறிவிட்டது.. சீமான் கருத்து!
சென்னை: தமிழ்நாட்டை யார் ஆள்வது என்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பது, அதிமுகவுக்கு தேவையில்லாத சுமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அதிமுக கொள்கை இல்லாமல் கூட்டணி வைத்திருக்கிறது என்று விமர்சித்துள்ள சீமான், நாதக யாருடனும் கூட்டணி வைக்காது என்றும் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி முதல் ஆளாக வேதாரண்யம் தொகுதிக்கு இடும்பாவனம் கார்த்தியை வேட்பாளராக அறிவித்துவிட்டது. வழக்கம் போல் கூட்டணியின்றி தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துவிட்டார். இருந்தாலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாம் தமிழரை கூட்டணிக்கு அழைத்து வருகின்றன.

சீமான் கருத்து
அதேபோல் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் சீமான், அதிமுக மீது எப்போதும் பாசத்துடன் அக்கறையுடன் இருப்பார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோருடனான தொடர்பு காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கூட்டணி குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
கொள்கையில்லா கூட்டணி
இதுதொடர்பாக சீமான் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக - பாஜக இடையில் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. அரசியலில் ஒத்த கொள்கை இருந்தால் தான் கூட்டணியாக வேலை செய்ய முடியும். ஆனால் கொள்கையை விட்டுவிட்டு கூட்டணி என்றால், அதனை எப்படி ஏற்பதென்றே புரியவில்லை. இது புது விளக்கமாக உள்ளது. இதனை எல்லா தலைவர்களும் பெரும்பாலும் சொல்கிறார்கள்.
நாதக நிலைப்பாடு
கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வது வழக்கமாகி வருகிறது. கொள்கை இல்லாமல் கூட்டணி வைக்கிறோம் என்றால், எந்த கொள்கையை நிறைவேற்ற கூட்டணி வைக்கிறோம் என்ற கேள்வி வருகிறது. கூட்டமாக சேர்ந்து கொள்கையடித்தால் நியாயம் ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள். எங்களை சந்திக்கும் மக்கள், எப்போதும் யாருடனும் கூட்டணி வைக்காதீர்கள் என்றே சொல்கிறார்கள்.
கணக்கு தவறிவிட்டது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு எடுத்துவிட்டார். என்னை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி இந்தியாவை யார் ஆட்சி செய்வது என்பதில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால், நிச்சயமாக அதிமுகவுக்கு பலன் கிடைத்திருக்கும். ஆனால் தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அவருக்கு தேவையற்ற சுமை.
அதிமுகவுக்கு சுமை
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்திருந்தால், இப்போது உடனிருக்கும் அணிகள் இருந்திருந்தால் அதிமுகவுக்கு 15 எம்பிக்கள் கிடைத்திருப்பார்கள். 2 மத்திய அமைச்சர்கள் கூட கிடைத்திருக்கலாம். அந்த இடத்தில் கணிப்பு தவறாக போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், நாதக எந்த கூட்டணியிலும் இணையாது என்பதையும் சீமான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications