பிடிஆர் மீது காலணி வீச்சு- தரம் தாழ்ந்தது, வெட்க கேடானது- பாஜகவினர் மீது சீமான் கடும் அட்டாக்
சென்னை : தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாராஜனை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நிகழ்வு, அரசியல் அநாகரீகத்தின் உச்சம் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், காஷ்மீரில் வீரமரணமடைந்த நிலையில், அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு, நிதி அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டபோது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நிகழ்ந்த இந்த சம்பவம், தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு திமுக-வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக-வினரின் இந்த அநாகரீக நடவடிக்கையை கண்டித்து பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பாஜகவினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் ஐயா பழனிவேல் தியாகராஜன் அவர்களை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வட மாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்துவரும் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல நுழைக்க முயலும் பாஜகவினரின் தரம் தாழ்ந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்திய பெருநாட்டின் ஆகச்சிறந்த தேசப்பக்தர்களாக தங்களுக்கு தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜகவினர், நாட்டிற்காக இன்னுயிர் இழந்த இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் திட்டமிட்டு வீண்மோதலை தூண்டியிருப்பது வெட்கக்கேடானது.
மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சரை வழிமறித்து காலணி வீசியதன் மூலம் நிதியமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் மட்டும் பாஜக அவமதிக்கவில்லை. நாட்டிற்காக உயிர்நீத்த வீரரின் தியாகத்தையும் அற்ப அரசியலுக்காக பாஜக கொச்சைப்படுத்திவிட்டது என அந்த அறிக்கையில், சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications