18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்.. லிஸ்ட்டோடு மேடையேறும் சீமான்? தண்ணீர் மாநாட்டில் எதிர்பார்ப்பு!
சென்னை: எப்போதுமே, தேர்தல் நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே, வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கு தயாராவது நாம் தமிழர் கட்சியின் வழக்கம். அந்தவகையில், இப்போதும் 2026 சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் சீமான். வரும் 15 ஆம் தேதி, 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம், பூத் கமிட்டி கூட்டங்கள் என நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி, ஆடு- மாடுகள் மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு என தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசுபொருளாகி உள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் தண்ணீர் மாநாட்டை நடத்த தயாராகியுள்ளது நாம் தமிழர் கட்சி.
உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டும், லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு நடத்தப்படுகிறது என்றும், ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் மாநாட்டுக்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறார் சீமான்.
தனித்துப் போட்டி என ஏற்கனவே அறிவித்துவிட்ட சீமான், 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். தனது சுற்றுப்பயணத்தின் போது வேட்பாளர்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியும் வருகிறார். மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி வீரப்பன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி சட்டசபைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நித்தியா அருண் போட்டியிடுவார் என்றும், வீரபாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ராஜேஷ் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமார் போட்டியிடுவார், கெங்கவள்ளியில் அபிராமி போட்டியிடுவார், ஆத்தூர் தொகுதியில் மோனிஷா சின்னத்துரை போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் நடக்கும் தண்ணீர் மாநாட்டில் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, சீமான் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சுமார் 5 மாதங்கள் உள்ள நிலையில், நாதக வேட்பாளர்கள் இப்போதே தீவிர தேர்தல் வேலைகளை தொடங்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications