"வடக்கன்" கைய புடிச்சி இழுப்பான், அடிச்சு துரத்தணும்..சீமான் பேச்சு! போலீசுக்கு ஓடிய மக்கள் அதிகாரம்
சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீசில் புகார் தந்துள்ளனர்
சென்னை: "வடக்கன் நம்ம பெண்களை கைய பிடிச்சு இழுப்பான், நம்ம குழந்தைகளை கடத்தி சென்று விடுவான் என்று சீமான் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இதனால், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலை உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.. இனவெறியை தூண்டி மோதலை ஏற்படுத்த துடிக்கும் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, நாம் தமிழர் கட்சிக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று மக்கள் அதிகாரம் சார்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வடமாநில தொழிலாளர்களே காரணம் என்று சீமான் குற்றம் சாட்டி வருவது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பேட்டி தந்திருந்தார்.

மரணசாசனம்
அந்த பேட்டியில், "புதிய கல்வி கொள்கை பாஜக, ஆர்எஸ்எஸ் செயல் திட்டம்... இது மரணசாசனம், தமிழர்கள் ஏற்கமாட்டார்கள். மதத்தை வைத்து மக்களை பாஜக பிரிக்கிறது... தமிழ்நாட்டில் ஏதாவது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு வடமாநில தொழிலாளர்கள் தான் காரணம்" என்று கூறியிருந்தார். அதேபோல, 2 நாட்களுக்கு முன்பும், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியபோது, தான் ஆட்சிக்கு வந்தால், வடமாநில தொழிலாளர்கள் மீது பலாத்கார வழக்கு போடுவேன் என்று சபதம் போட்டார்..

சலோ சலோ சலோ
அப்போது தொடர்ந்து சீமான் பேசும்போது, "ஆட்சிக்கு வந்தால், தெறிச்சு ஓடுவாங்க.. இந்திக்கார பயல் எல்லாம், பெட்டியை கட்டி வெச்சிட்டு 'சலோ சலோ'ன்னு போயிட்டு இருப்பான்.. ஒரே வாரத்துல பெட்டியை நாம கட்டிடுவோம்.. கஞ்சா வெச்சிருந்தான் - கேஸ் போடு, அபின் வெச்சிருந்தான் - இந்தா கேஸ் போடு, பொண்ணை கைய பிடிச்சு இழுத்துட்டான் - கற்பழிப்பு கேஸ் போடு.. பாலியல் தொல்லை இப்படியே 1000 பேரை உள்ளே தூக்கி போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளுத்துடுவேன்.. அவனே பெட்டியை தூக்கிட்டு ஓடிடுவான்.. உள்ளே வெச்சி உரிச்சி விட்டால் போதும்.. 'இந்தியா இஸ் அவர் நேஷன் ஹை.. யெஸ் ஹே.'.ன்னு சொல்ல வேண்டியதுதான்" என்று பேசியிருந்தார்.

மக்கள் அதிகாரம்
இதையடுத்து, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து இனவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... இதற்கு பிறகு, மக்கள் அதிகாரம் இயக்கத்தின் மாநில செயலாளர் வெற்றிவேல் செழியன் செய்தியாளர்களிடம் பேசினார்.. சீமான் மட்டுமல்லாமல், இதேபோல சாட்டை துரைமுருகனும் இழிவாக பேசிவருவதாக குற்றஞ்சாட்டினார். வெற்றிவேல் செழியன் சொன்னதாவது:

சீமானின் இனவெறி
"வடமாநில இளைஞர்கள் எத்தனையோ பேர், தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்து வேலை பார்த்து வருகிறார்கள்.. அவர்களை அடித்து துரத்த வேண்டுமென தொடர்ந்து சீமானும், சாட்டை துரைமுருகனும் பேசி வருகின்றனர். அதுவும், கட்சி பொதுக்கூட்டத்திலேயே வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையிலும், ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும், இடையே மோதல் போக்கை உருவாக்கும் வகையில் சீமானும் சாட்டை துரைமுருகனும் பேசி வருகிறார்கள்..

சாட்டை துரைமுருகன்
வடக்கன் வரும்போதே 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான், பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சா விற்கிறான், நம்ம பெண்களை கைய பிடிச்சு இழுப்பான், நம்ம குழந்தைகளை கடத்தி சென்று விடுவான் என்று சீமான் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இதனால் தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் ஏற்படுத்தி வருகிறார்கள்.. அதனால், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலை உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.. இனவெறியை தூண்டி மோதலை ஏற்படுத்த துடிக்கும் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அத்துடன், நாம் தமிழர் கட்சிக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்..

தெற்கனும் மேற்கனும்
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் அதிக வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் குடியேறிவிட்டதாகவும், "தமிழர்களை அடிக்க துணிந்தவர்கள்.. விரைவில் நம்மை அடிமைப்படுத்துவார்கள் என்றும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் மதுரை முத்து உட்பட பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.. மேலும், வடக்கில் இருந்து வரும் இந்தியர்கள், தமிழர்களை மட்டமாக நினைப்பதாகவும் ஒரு கருத்து சோஷியல் மீடியாவில் உலாவரும்நிலையில், இதற்கு நேர்மாறாக, பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 4 நாட்களுக்கு முன்பு ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

வடக்கனும் கிழக்கனும்
அதில், "வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான்.யாதும் ஊரே யாவரும் கேளிர்." என்று பதிவிட்டிருந்தார்.. வடமாநில மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் பெருகி வரும்நிலையில் மனிதத்தை விதைத்து, விஜய் ஆண்டனி பதிவிட்ட இந்த ட்வீட், இணையத்தில் டிரெண்ட் ஆனதையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.












Click it and Unblock the Notifications