ஆய்வு சட்டப்படி நடக்கும்..மடியிலே கனமில்லை என்றால் பயம் எதற்கு..தீட்சிதர்களை கேட்கும் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணைக்குழுவிடம் அளிக்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணைக்குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் சட்டப்படி ஆய்வு நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளிடம் வரவு செலவு கணக்குகளை தெரிவிக்க மறுத்து தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது. அதனை விசாரிக்க அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்றும், நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டு இருந்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நேற்று தீட்சிதர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையை அடுத்து இன்று துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது. வரவு- செலவு பற்றி துணை ஆணையர் ஜோதி தலைமையில் ஆய்வுக்கு வந்த நிலையில் தீட்சிதர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடத்த சட்டரீதியாக அணுகவில்லை. கோயிலில் 2009ல் நடந்த கணக்கு தணிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் தெரிவித்தனர். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் நடராஜர் கோயில் கணக்குகளை பராமரிப்பதாக தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் என்ன மாதிரியான புகார் கூறினார்கள் என தெளிவாக அறநிலையத்துறை கூறவில்லை எனவும் கூறியுள்ளனர்.
கோயில் நிர்வாக வரவு-செலவு, சொத்து, நகைகள் பற்றி அறநிலையகுழு 2 நாள் ஆய்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆய்வு நடத்துவதற்காக அவர்கள் கோவிலுக்குள் அமர்ந்திருந்தனர். மாலைக்கு மேல் மீண்டும் வந்த அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பொது கோவில் அல்ல என்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கணக்கு கேட்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி ஆய்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.
மடியிலே கனமில்லை என்றால் வழியிலே பயமெதற்கு என்று கேட்ட அவர், ஆய்வு செய்வதற்கு முழு ஒத்துழைப்பு தருவதுதான் மனுநீதி மனு தர்மம் என்றார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். முதல்வரின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு சட்ட ரீதியாக ஆய்வு நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார் சேகர்பாபு.
இந்த நிலையில் மாலையில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வழக்கறிஞர்கள் மூலம் சட்ட ரீதியாக பதில் தரப்படும் என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலையில் பல மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் மாலையில் மீண்டும் கோவிலுக்கு வந்த போது தீட்சிதர்கள் தரப்பில் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆய்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் தரப்பினருக்கும் தீட்சிதர்கள் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.