‘ஏய் சும்மா இரு’.. திருவொற்றியூர் கோயிலில் பொது மக்கள் அடுக்கடுக்கான புகார்.. டென்சனான சேகர் பாபு
சென்னை: திருவொற்றியூர் புகழ்பெற்ற வடிவுடையம்மன் கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஆதிபுரீஸ்வரர் நிஜரூப தரிசனம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகம் இருப்பதால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் ஆவதாக பொது மக்கள் கூறி வருகிறார்கள். இதுதொடர்பாக அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் ஒரு மூதாட்டியை ஒருமையில் பேசி, இளைஞரின் செல்போனை தட்டிவிட முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் என்று அனைத்து இடங்களிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பாஜக மத அரசியல் செய்வதாக திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது. நீதிபதி சுவாமிநாதன் மீதும் திமுக விமர்சனம் வைத்துள்ளது.

ஆதிபுரீஸ்வரர் தரிசனம்
மறுபக்கம் திமுக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் கோயிலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோயில் உள்ளது. அங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கார்த்திகை மாதம் 3 நாட்கள் ஆதிபுரீஸ்வரர் நிஜ ரூப தரிசனம் நடைபெறும். வருடம் முழுவதும் தங்க கவசத்தில் காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரர், இந்த 3 நாட்கள் மட்டும் தங்க கவசம் இல்லாமல் காட்சிபுரிவார்.
பொது மக்கள் புகார்
அதன்படி டிசம்பர் 4 (நேற்று), 5 ஆம் தேதி (இன்று), 6 ஆம் தேதி (நாளை) ஆகிய 3 நாட்கள் நிஜரூப தரிசனம் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு பொது தரிசனம், ரூ.25 மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என்று 3 தனித்தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விஐபிகளுக்கு தனி வரிசை உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்டோர் தரிசனம் செய்துள்ளனர். அனைத்து வரிசைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் 4-6 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வடிவுடையம்மன் கோயிலில் ஆய்வு செய்தார்.
சேகர் பாபு டென்சன்
அப்போது மக்கள் அவரிடம் தங்கள் புகார்களை அடுக்கினார்கள். கொட்டும் மழையிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு பெண், "சார் 4 மணி நேரமாக வரிசையில் நிற்கிறோம். விஐபிகள் எல்லாம் உடனே உள்ள போறாங்க." என்று சேகர் பாபுவிடம் முறையிட்டார். அதற்கு சேகர் பாபு, "50,000 பேர் வரிசையில் நிற்கிறார்கள். சும்மா இருங்க." என்று கூறி சென்றார்.
மேலும் இந்த சம்பவத்தை அங்கிருந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்தார். சேகர் பாபு அதைத் தட்டி விட முயற்சி செய்தார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தரிசனத்திற்கு தாமதம் ஆவது தொடர்பாக கேள்வி எழுப்பிய மூதாட்டி ஒருவரை, "ஏய்.. சும்மா இரு." என்று அவர் ஒருமையில் விமர்சனம் செய்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications