கந்தசாமி கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன்! விரைவில் மகிழ்ச்சி செய்தி! சேகர்பாபு தகவல்
சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியல் விழுந்த ஐபோன் குறித்து ஜனவரி 2 அல்லது 3 தேதிகளில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது. தெய்வ திருவுருவங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலண்டரை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புத்தாண்டு பிறப்பின் போது கோயில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றம் ஏதும் இல்லை. இது தொடர்பாக ஏற்கெனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும்.
பல கோயில்களில் தொகையை பெற்றுக் கொண்டு சிலரை அர்ச்சகர்கள் உள்ளே அழைத்து செல்வது குறித்து கேட்கிறீர்கள். முடிந்த அளவிற்கு அவர்களை கட்டுப்படுத்தி வருகிறோம். அதுபோல் திருப்போரூரில் கந்தசாமி கோயிலில் ஐபோன் உண்டியலில் விழுந்தது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் ஐபோன் குறித்து மகிழ்ச்சிகரமான முடிவு வரும் ஜனவரி 2 அல்லது 3 தேதிகளில் எடுக்கப்படும் என்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் 6 மாதங்கள் கழித்து உண்டியல் திறக்கப்பட்டது. அதில்ரூ 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம் , 620 கிராம் வெள்ளி இருந்தது. இத்துடன் ஒரு செல்போனும் இருந்தது. இது யாருடையது என கோயில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த போன், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தினேஷ் திருப்போரூர் கோயிலுக்கு வந்து தனது போனை பெற்றுக் கொள்ளலாம் என தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வந்துள்ளார். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என கூறி போனை தர மறுத்துவிட்டனர்.
அந்த போனின் விலை ரூ 1.50 லட்சம் என்று கேட்டும் செல்போனை திருப்பி கொடுக்க கோயில் நிர்வாகமோ முடியவே முடியாது. வேண்டுமானால் உங்கள் போனில் இருக்கும் தரவுகளை எடுத்துக் கொண்டு போனை கொடுங்கள் என்றனராம். இதையடுத்து அந்த போனில் இருந்த போட்டோக்கள், கான்டாக்ட்கள், முக்கிய மெசேஜ்களை தினேஷ் எடுத்துக் கொண்டதும், போனை மறக்காமல் கோயில் நிர்வாகம் கேட்டு வாங்கிக் கொண்டனராம். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
சீமான் கூட , "உண்டியலில் விழுந்த ஐபோனை கொண்டு முருகன் யாரிடம் பேச போகிறார். ஐபோன் முருகனுக்கு சொந்தம் ரைட்டு,வெடிகுண்டு விழுந்தால் என்ன செய்வார்களாம் என கேள்வி எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications