மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை? புகார் கடிதத்துடன் கார்கேவை சந்திக்கும் செல்வப்பெருந்தகை
சென்னை: விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மீதான புகார் குறித்து ஆலோசனை நடத்தவே காங்கிரஸ் தலைமை என்னை பெங்களூர் அழைத்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொடுத்த புகார் கடிதத்துடன் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும். அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்கள் வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. காங்கிரஸ் தலைமை கூறும் சீட்டுகளை வழங்க வேண்டும் என்பது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தனர். இதில் 7 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஒருவர் சிபிஎம்.
யார் பலமாக நாடாளுமன்றத்தில் சண்டையிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம், துணை இருக்கிறோம் என்று சொல்பவர்கள் யாரும் சஸ்பெண்ட் ஆகவில்லை. இது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும்.
திமுகவினர் மரியாதை கொடுத்தால் நாங்களும் மரியாதை கொடுப்போம். இல்லாவிட்டால் பதிலடி கொடுப்போம். விருதுநகரில் நான் போட்டியிட மாட்டேன். எனக்கு காங்கிரஸ்தான் உயிர், மற்றதெல்லாம்... அப்புறம் என் வாயில நல்லா வரும் என மாணிக்கம் தாகூர் கடுமையாக பேசியிருந்தார்.
மதுரை காங்கிரஸ் கட்சியினர் திடீரென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மதுரை தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் எனக்கு அந்த தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது. கட்சி தலைமையான ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையிலும் மாணிக்கம் தாகூர் பேசி வருவது தவறானது, ஜனநாயகத்திற்கு முரணானது.
ராகுல் காந்தி, கார்கேவைவிட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சையாக பேசுவது ஏன்? அறைக்குள் பேச வேண்டியதை பொதுவெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்?
மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புகார் கடிதம் கொடுத்தனர். அவர் மீதான புகார் குறித்து ஆலோசிக்க என்னை பெங்களூருக்கு கார்கே வரச் சொன்னார். அதனால் நான் இப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொடுக்க புகார் கடிதத்துடன் செல்கிறேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், அவரது ஆதரவாளர் ராஜேஷ் குமாரும் திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மாணிக்கம் தாகூர் கடந்த சில மாதங்களாக திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications