தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறீர்களே.. மக்களவையில் நடந்ததை என்ன சொல்வது? -காங்கிரஸ்
சென்னை: ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த விரும்பத்தகாத சம்பவத்தை பெரிது படுத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறீர்களே, இன்று நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வை என்ன சொல்வது என பாஜகவினருக்கு காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை வினவியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அவசரப் பதிவு வருமாறு;

''இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மக்களவையில் அத்துமீறி நுழைந்து, கலர் பாம் வீசிய செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்சம்பவத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததை, உடனடியாக தடுத்து நிறுத்தி சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்தது தமிழ்நாடு அரசு.
ஆனால், விரும்பத்தகாத இச்சம்பவத்தை பெரிது படுத்தி, எதிர்க்கட்சிகள் ஏதோ தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். இன்று (13.12.2023) ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் அவர்கள் ஆளுநர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறியிருக்கிறார்.
நாட்டின் இறையாண்மையான மக்களவையில் உள்ள உறுப்பினர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு என்ன கருத்து சொல்வார்கள்? யாரை குற்றம் சொல்வார்கள்?
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித சமரசம் செய்து கொள்ளக்கூடாது. புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications