Rahul- Vijay meet: ராகுல் காந்தியை விஜய் சந்தித்தாரா? செல்வப்பெருந்தகை சொல்லும் பதிலை பாருங்க
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்தினாரா என்ற கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். மேலும் அவர் கூட்டணி குறித்து பல்வேறு விஷயங்களையும் தெரிவித்துள்ளார்.

தவெக, காங்கிரஸுடன் கூட்டணிக்கு செல்வதாக ஒரு பேச்சு எழுந்தது. அதிலும் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான போது, ராகுல் காந்தி, விஜய்க்கு போன் செய்து பேசி ஆறுதல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
அது போல் வெளிநாட்டில் இருக்கும் ராகுல், இந்தியா திரும்பியதும் கரூர் மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அப்போது அவர் விஜய்யையும் சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் பெறும் இடங்களை பொறுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்கலாம் என காங்கிரஸ் கணக்கு போட்டிருந்தது. ஆனால் தற்போது பீகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் திமுகவிடம் கூடுதலாக ஒரு சீட்டை கூட நினைத்து பார்க்க முடியாத நிலை உள்ளது.
இதனால் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எஸ்ஐஆருக்கு எதிராக தவெகவினர் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், "ராகுலும் விஜய்யும் கூட்டணி குறித்து பேசவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்" என்றார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பதை மக்கள் தெளிவுப்படுத்துவார்கள்.
எஸ்ஐஆருக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் நடத்தியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றார். ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பிய போது, "நான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கிறேன்.
எனக்கு இது குறித்து எந்த தகவல்களும் தெரியவில்லை. யாரோ சில இது போல் உறுதிப்படுப்படாத செய்திகளை வெளியிட்டு தனக்கு பெயர் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கூட பேசினேன். அவரும் இது குறித்து தனக்கு தெரியாது என்றார். விஜய்யுடன் ராகுல் சந்திப்பு என்பது எங்கள் கட்சித் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி சொன்னால் மட்டுமே அது அதிகாரப்பூர்வமானது என்றார்.












Click it and Unblock the Notifications