பேரறிவாளன் விவகாரம்.. காங்கிரஸ் எடுக்க போகும் நடவடிக்கை.. செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை: காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். அவர் வழக்கறிஞரானதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையில் எடுத்து எதிர்க்க தொடங்கியுள்ளது. பேரறிவாளன் விஷயத்தில் காங்கிரஸ் எடுக்க போகும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செல்வப்பெருந்தகை விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இப்போது வெளியாவது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. கருத்து திணிப்பு நடத்துவோர் வேறு மாதிரி சொல்கிறார்கள். மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளனர்.

மோடி மீது விமர்சனம்
இன்னும் 2 நாட்களில் முடிவுகள் வெளியாகிவிடும். மக்கள் என்ன தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்படும். மக்கள் தீர்ப்பை இந்நேரம் 35 சதவீதம் பேர் படித்திருப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்று அண்ணன் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார். எங்களின் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு நாக்கு இல்லை. பல நாக்குகள் உள்ளது. ஒரு நாக்கு உள்ளவர் சொன்னதற்கு தான் பதில் சொல்ல முடியும்.
பல நாக்கு உள்ளவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. மோடி தமிழகம் வரும்போது தமிழர் நாகரீகம், தமிழர் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம் என்று பேசுவார். வட இந்தியா சென்றால் தமிழர்களை விமர்சிப்பார். பீகாரில் தமிழர்களை திட்டினார். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்பார். மாற்றி மாற்றி பேசுபவர் தான் மோடி. அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
பேரறிவாளன் விவகாரம்
தமிழகத்தில் பாசிசத்திற்கும், மத வாதத்திற்கும் எப்போதும் இடமில்லை. அதனால் தான் அவர்கள் இந்த தேர்தலில் படு தோல்வியடைய போகிறார்கள். பேரறிவாளன் வழக்கறிஞரான விவகாரத்தை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வருகிறார்கள். அதை சட்டப்படி எதிர்கொள்வோம். எங்கள் சட்டக்குழுவின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு. இது சட்டப்படி நடந்துள்ளதா என்பதை பார்த்து நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
தமிழகத்தில் இனி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிப்போம் அல்லது எதிர்க்கட்சியாக தான் இருப்போம் என்று கிரிஷ் சோடங்கர் சொன்னது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளிக்காமல் சென்றார்.












Click it and Unblock the Notifications