கோயில் குடமுழுக்கு.. திமுக ஆட்சியில் வலதுசாரி அதிகாரிகள்! செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகை பங்கேற்றிருந்த நிலையில், நிகழ்ச்சியில் அவர் கண்டுகொள்ளப்படாமல் ஓரங்கட்டப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து 'ஒன்இந்தியா அரசியல்' யூடியூப் தளத்தில் அவர் கொடுத்த நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, "அதிகாரிகள் பிஸியாகிவிட்டார்கள். நடைமுறையை அவர்கள் மீறிவிட்டார்கள். யாரோ விஐபி வந்தார்கள் என்று சொல்லி, அவர்கள் பின்னாடி அதகாரிகள் போய்விட்டார்கள். இதனால் தொகுதி மக்களுக்கும் மன வருத்தம்தான். கோயில் விமான தளத்திலிருந்து கீழே வந்து கோயில் கருவறைக்குள் போக முயன்றோம். ஆனால் போக முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஒன்றரை மணி நேரமாக காத்திருந்தோம். ஆனால் இறைவனை வழிபாடு செய்ய முடியவில்லை. என்னுடைய தொகுதிதான், நான் தினமும் அந்த பக்கம் சென்று வரும் ஆள்தான். ஆயினும் ஆயிரக்கணக்கான மக்களின் வழிப்பாட்டில் இடையூறு ஏற்படுத்தாமல் நாங்கள் திருமபி வந்துவிட்டோம். இதில் அரசியல் இருப்பதாக நான் பார்க்கவில்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கு. வலதுசாரி அதிகாரிகள்தான் இப்படி நடந்துக்கொள்வார்கள். இந்த சம்பவம் அமைச்சருக்கோ, முதலமைச்சருக்கோ தெரிய வாய்ப்பில்லை."
'ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருக்கும் நபரை எப்படி உள்ளே விடமாட்டோம் என்று சொல்ல முடியும்? அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?'
"நேரடியாக விட மாட்டோம் என்று சொல்லியிருந்தார் போராடியிருப்போம். ஆனால் இங்கு அவர்கள் புறக்கணித்தார்கள். ஒரு விஜபியின் பின்னால் அனைவரும் சென்றதால் எங்களை கண்டுக்கொள்ளவில்லை. யார் அந்த விஐபி என அவர்கள்தான் சொல்ல வேண்டும்"
'அதிகாரிகள் சமூநீதிக்கு எதிராக, பாஜக ஆதரவாளராக இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?'
"வலதுசாரி அதிகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்"
'இந்த ஆட்சியில் இருக்கிறார்களா?'
"எந்த ஆட்சியிலும் அவர்கள் இருப்பார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் கூட அவர்கள் இருப்பார்கள். அது தவிர்க்க முடியாது, ஆனால் சரி செய்யப்பட வேண்டும். கண்களுக்கு தெரியாமல் அவர்கள் இருப்பார்கள். அதிகாரிகள்தான் ஆட்சியாளர்கள் என்கிற மனநிலையை நேற்று என்னால் பார்க்க முடிந்தது. கொடி காட்டும் நிகழ்வில் அவர்கள் எங்களை பொருட்படுத்தவில்லை. பலரும் எம்எல்ஏவிடம் கொடியை கொடுங்கள் என்று சொன்ன போதும் கூட அவர் அதை ஏற்கவில்லை.
ஆனால், அமைச்சர் திருச்செந்தூரிலிருந்து கொடி காட்டுகிறார். எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டு காட்ட சொல்கிறார்கள். எம்ல்ஏக்கள் மக்களின் பிரதிநிதிக்கள். 4 லட்சம் மக்களின் பிரதிநிதி நான். இருப்பினும் மக்கள் பிரதிநிதியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
ஆட்சி நன்றாக இருக்கிறது, மனு நீதி சோழன் போல முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார். காவல்நிலைய மரணம் தொடர்பான விஷயத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்றினார். கோயில்களின் குடமுழுக்குக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு, கோயில் நிலங்கள் மீட்பு என பல செயல்களை அரசு செய்து வருகிறது. ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகளால் ஆட்சிக்கு இப்படியான அவப்பெயர்கள் ஏற்பட்டுவிடுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம். துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்" என பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications