ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் விசிகவுக்காக செல்வப்பெருந்தகை ஶ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியில் மாறி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. (Selvaperunthagai)

செல்வப்பெருந்தகை தொகுதி மாற்றம்
தேர்தல் என்றால் நிர்வாகிகளின் கட்சி தாவல்கள், தொகுதி மாறுதல்கள் இயல்புதான். இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தொகுதி மாறவுள்ளனர். அந்த வரிசையில் காங்கிரஸ் செல்வப்பெருந்தகையும் தொகுதி மாறவுள்ளாராம்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை ஶ்ரீபெரும்புதூர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாற முடிவு செய்துள்ளாராம். சென்னை மாநகரை நோக்கி மாறவுள்ளாராம்.
எழும்பூரில் போட்டி
விடுதலை சிறுத்தைகள் வழங்கியுள்ள விருப்பப் பட்டியலில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி இடம்பெற்றுள்ளதாம். ஶ்ரீபெரும்புதூர் தனி தொகுதி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று விசிக நம்புகிறதாம். அதனால் ஶ்ரீபெரும்புதூரை திமுகவிடம் அழுத்தமாகவே கேட்கிறார்களாம். இதனால் செல்வப்பெருந்தகை எழும்பூர் தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தங்கள் வசமுள்ள எழும்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் செல்வப்பெருந்தகை எழும்பூரில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிகளை இறுதி செய்யும்போது இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications