அதிமுக கொடி பொருத்திய கார்! சட்டை பையில் ஜெயலலிதா படம்! செங்கோட்டையனின் வலது கையை கவனித்தீர்களா?
சென்னை: அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில், சட்டை பாக்கெட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன், தலைமைச் செயலகத்திற்கு வந்த செங்கோட்டையனின் வலது கையை கவனித்தீர்களா?

அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலங்களில் ஓங்கியிருந்த செங்கோட்டையன், திடீரென அமைச்சரவையில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்.
பின்னர், அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவராக இருந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, செங்கோட்டையனை மீண்டும் அமைச்சரவையில் இணைத்தார் எடப்பாடி பழனிசாமி. பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த நிலையில் ஆட்சி மாற்றத்தை அடுத்து கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவாக நீடித்து வந்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த நிலையில் அவருக்கும் செங்கோட்டையனுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இது கண்கூடாகவே ஒரு சில விஷயங்களில் தெரிந்தது. இந்த நிலையில் செங்கோட்டையனின் பதவி பறிப்புக்கு பின்னர் அவர் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இதனால் அவருக்கு வரும் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு இல்லை என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்புக்கு பாடுபடுவார், மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள சட்டநடவடிக்கைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு தவெகவில் இணைவதற்கான ஒரு ஆஃபர் கிடைத்ததாக சொல்லப்பட்டது. அவரை ஆதவ் அர்ஜுனாவும் ஜான் ஆரோக்கியசாமியும் சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையில் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார்.
அங்கு அவர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தான் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரது வலது கையில் அதிமுக கொடி பச்சை குத்தப்பட்டிருந்தது. இடது பக்க சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் படத்தையும் அவர் வைத்திருந்தார்.
நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்படும் செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை விஜய்யும் அவரது கட்சியினரும் நன்கு பயன்படுத்தி கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications