கோன் ஹே? அமித் ஷா கேள்வி கேட்டதுதான் மிச்சம்.. செங்கோட்டையன் அப்படியே கப் சிப்புன்னு ஆகிட்டாரே!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார். இந்தக் கூட்டத்தின் போது, அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது என அமித் ஷா உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில் கே.ஏ. செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு செங்கோட்டையன் யார் என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது.
கூட்டணி அமைத்ததற்கு அடிப்படை, உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்ற அமித் ஷாவின் உறுதிமொழிதான் என எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார். அப்படியிருக்கையில் செங்கோட்டையனை சந்தித்தது ஏன், இது உள்விவகாரத்தில் தலையிடுவது ஆகாதா என்று அவர் கேட்டு உள்ளார். இந்த கேள்விக்கு அமித் ஷா உடனடியாக பதிலளித்துள்ளார்.

எடப்பாடி கேள்வி அமித் ஷா பதில்
தான் அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிடவில்லை என அமித் ஷா மறுப்பு தெரிவித்தார். மேலும், "செங்கோட்டையன் யார்? அவர் மூலம் கட்சி விவகாரங்களில் தலையிட எனக்கு என்ன இருக்கிறது? நாம் கூட்டணியில் இருக்கிறோம். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இருக்கையில் நான் ஏன் தலையிட வேண்டும்?" என்று அமித் ஷா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித் ஷா, "செங்கோட்டையன் யார்?" என்று கேட்டது செங்கோட்டையனுக்குத் தெரிந்த பிறகு, அவர் அமைதியாகிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு அல்லது ஐந்து நாட்களாக அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. டெல்லியின் ஆதரவு தனக்கு இல்லை என அவர் கருதுவதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
செங்கோட்டையன் யார்?
நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அதிமுக தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தன்னைச் சந்தித்தது ஒரு சாதாரண வாழ்த்துப் பரிமாற்றம் மட்டுமே என்றும், அதில் எந்த அரசியல் விவாதமும் நடைபெறவில்லை என்றும் அமித் ஷா எடப்பாடி பழனிசாமிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை குறித்து சில பாஜக தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அவரது இந்த விளக்கத்தை அமித் ஷா ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு சுமூகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாகக் கூறப்படுகிறது.
செங்கோட்டையன் ஷாக் - அமித் ஷா மீட்டிங்
தனிப்பட்ட சந்திப்புக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற அதிமுக தலைவர்கள் அமித் ஷாவை சந்தித்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மனு சமர்ப்பித்தனர். இந்தச் சந்திப்பு வழக்கமான சந்திப்பாக இருந்தது.
எடப்பாடி பழனிசாமி தன்னுடன் வந்த மூத்த நிர்வாகிகளை விடுதிக்கு அனுப்பிவிட்டு, தனியாக அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி போலீசாரின் இரண்டு பாதுகாப்பு வாகனங்களுடன் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி சென்றார்.
முதலில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பத்து நிமிடங்கள் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். பின்னர், நிர்வாகிகள் மட்டும் அமித் ஷாவின் இல்லத்திலிருந்து வெளியே வந்தனர். எடப்பாடி பழனிசாமியும் வெளியே சென்றதாக தெரியப்படுத்த, டெல்லி போலீஸ் வாகனமும் அவர்களுடன் விடுதிக்குச் சென்றது.
அதன்பிறகு, இந்தி மற்றும் தமிழ் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளருடன் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்து, எடப்பாடி பழனிசாமி எந்த போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல், தனது காரில் கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே வெளியேறி விடுதிக்குத் திரும்பினார்.












Click it and Unblock the Notifications