விஜய்க்கு முதல் கிப்ட்.. தவெகவில் சேர்ந்ததும் செங்கோட்டையன் சர்ப்ரைஸ்.. எம்ஜிஆரின் விசுவாசியாச்சே
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு தவெகவின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்பட 2 முக்கிய பொறுப்புகளை வழங்கினார். இந்தவேளையில் செங்கோட்டையன், விஜய்க்கு கொடுத்த கிப்ட் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். 1972ல் எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோதே அந்த கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். 9 முறை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர். ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் சட்டசபை தொகுதியில் அசைக்க முடியாத தலைவராக வலம் வருகிறார் செங்கோட்டையன்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவருக்கு தற்போதைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து நேற்று அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று செங்கோட்டையன், தவெகவில் இணைந்தார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தவெகவின் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். செங்கோட்டையனை கட்சி அலுவலகத்தில் வரவேற்ற விஜய் தனது கட்சியில் சேர்த்து கொண்டார்.
செங்கோட்டையின் கழுத்தில் தவெக கட்சி துண்டை அணிவித்த விஜய், உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதன்மூலம் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார். இந்த வேளையில் செங்கோட்டையன் விஜய்க்கு கிப்ட் ஒன்றை கொடுத்தார். எம்ஜிஆரின் வரலாற்றை கூறும் புத்தகத்தை விஜயிடம், செங்கோட்டையன் வழங்கினார்.
விஜய்க்கு செங்கோட்டையன் வழங்கிய அந்த புத்தகத்தின் பெயர் ‛நான் ஏன் பிறந்தேன்' என்பதாகும். இது எம்ஜிஆரின் சுயசரிதை புத்தகமாகும். இதனை எம்ஜிஆர் தான் எழுதினார். இந்த புத்தகத்தில் எம்ஜிஆர் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசிய சம்பவங்களை தொகுதி எழுதி உள்ளார். இந்நிலையில் தான் அந்த புத்தகத்தை முதல் கிப்ட்டாக விஜய்க்கு, செங்கோட்டையன் வழங்கி உள்ளார்.
செங்கோட்டையன் எம்ஜிஆரின் விசுவாசி. 1972ம் ஆண்டில் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோதே அந்த கட்சியில் பயணிப்பவர். 1977 ல் முதல் முறையாக செங்கோட்டையன் கோபி செட்டி பாளையம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வானார். அப்போது எம்ஜிஆர் தான் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தார். இப்படியான சூழலில் தான் எம்ஜிஆர் தொடர்பான புத்தகத்தை செங்கோட்டையன், விஜயிடம் வழங்கி உள்ளார்.
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு மொத்தம் 2 பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று தவெகவின் நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி. மற்றொன்று கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் அமைப்பு பொதுச்செயலாளராக செங்கோட்டையன் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் சேர்ந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications