செங்கோட்டையன் பாயிண்ட்டை பிடிச்சிட்டாரு.. மே 4 ரகசிய கோட்வேர்ட்! தவெக சர்வேயில் இத்தனை தொகுதிகளா?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை தனது வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிகிறது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றி வாய்ப்புள்ள 40-க்கும் மேற்பட்ட முக்கிய வேட்பாளர்களுக்குப் பல்வேறு வியூகங்கள் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதுமாக நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் இறுதி முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாகவுள்ளன. ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்ற பலப்பரீட்சையில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்த்தரப்பான அதிமுக மும்முரமாகக் களமாடி வருகின்றன.

தவெக விஜய் - வெற்றி கோடு?
இந்த சூழலில், முதல் தேர்தலை சந்தித்துள்ள தவெகவும் வெற்றி கோட்டை தொட்டுவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் உள்ளது. 3 பிரதான கட்சிகளுமே தங்களுக்குச் சாதகமான முடிவுகள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் தேர்தல் களத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
அதனால்தான் கடந்த 2 நாட்களாக பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொடர் ஆலோசனைக் கூட்டங்கள், வாக்கு எண்ணிக்கை நாளுக்கான ஆயத்தப் பணிகளை மையமாக வைத்தே நடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தவெக தலைமை நடத்திய விரிவான பூத் அளவிலான உள்முகக் கள ஆய்வுகளின்படி, பல தொகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து, சுமார் 50,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 40-க்கும் மேற்பட்ட முக்கிய வேட்பாளர்கள் பனையூருக்கு நேரில் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்
அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களும் முகவர்களும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டதாக தெரிகிறது-
வாக்கு எண்ணிக்கை மையங்களில் எத்தகைய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து மிகத் தெளிவான கட்டளைகள் வேட்பாளர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவிலும் பதிவாகும் வாக்குகளைத் துல்லியமாகச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை கட்சித் தலைமை வலியுறுத்தியதாம்.
கவனக்குறைவு கூடாது
அதுமட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எந்தவொரு இடத்திலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது.
குறிப்பாக, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு ஊசலாடும் தொகுதிகளில் எதிர்த்தரப்பினர் மறுவாக்கு எண்ணிக்கை கோரவோ அல்லது சட்டச் சிக்கல்களை உருவாக்கி முடிவுகளைத் தாமதப்படுத்தவோ வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழல் நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இதனை எதிர்கொள்ள வேட்பாளர்கள் தங்களுக்குக் கீழ் அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர் குழுவைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுக, திமுக செல்வாக்கு
ஜனநாயக முறைப்படி வெற்றியை நிலைநாட்டுவதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தேவையற்ற மோதல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தப் போராடும் நிலையில், தவெகவின் இந்தத் தீவிரமான முன்னேற்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதி தேர்தல் களத்தில் வெளிப்படப்போகும் மக்கள் தீர்ப்பு, தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!














Click it and Unblock the Notifications