அடடே.. அவரா? முக்கியமான ஆளாச்சே? அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவும் முக்கிய புள்ளி! கலகல கரூர்!
சென்னை: அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களான அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்டோர் திமுகவுக்கு தாவி இருக்கும் நிலையில், எம்பி ஒருவர் திமுகவுக்கு தாவ இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிமுகவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து டெல்லி அரசியலை கவனித்து வந்தவர் அந்த அரசியல் புள்ளி என்கின்றனர் அதிமுகவினர். மேலும், அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவும் முக்கிய தலைவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும், தற்போதே அரசியல் கணக்குகளும், கட்சி தாவல்களும் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தைகளை தீவிரமாக்கியுள்ளன.
அதே நேரத்தில் அசுர கூட்டணி பலத்துடன் இருக்கும் திமுக, அதிமுக கட்சி மற்றும் கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் பணிகளை தொடங்கி இருக்கிறது. பாஜக அதிமுக - கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் அதிமுகவில் இருக்கும் பல தலைவர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர்.

அதிமுக பாஜக கூட்டணி
அது மட்டும் அல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகள் சில சீனியர்களை கோபப்படுத்தி இருக்கும் நிலையில் அவர்கள் திமுகவுக்கு தாவலாம் என சொல்லப்படுகிறது. முக்கியமாக அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் அதிமுகவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழ ஆரம்பித்தன. முதல் முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணி என விமர்சித்ததோடு சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என கூறி இருந்தார். அவர் அதிருப்தியில் இருப்பது தெரியவந்த நிலையில் திமுக தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக
அதன் பயனாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா. அதிமுகவின் சிறுபான்மை தலைவர்களின் முக்கியமானவராக கருதப்பட்ட அன்வர் ராஜா ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தார். அவரது மறைவுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மீது அதிருப்தியில் இருந்து அவர் பிறகு கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தார். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இணைந்தாலும் பாஜக கூட்டணியால் வெறுப்பில் இருந்த அவர் திமுக அமைச்சர்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு மாநில கலை இலக்கிய அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கார்த்திக் தொண்டைமான்
தொடர்ந்து புதுக்கோட்டையில் வலுவாக மக்கள் செல்வாக்குடன் இருக்கும் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். அதில் அமைச்சர் ரகுபதியின் பங்கு அதிகம் என சொல்லப்படுகிறது. புதுக்கோட்டையை பொருத்தவரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலுவாக இருக்கும் நிலையில் அவரை எதிர்த்து கார்த்திக் தொண்டைமான் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து பல முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் திமுகவில் இணைவார்கள் என சொல்லப்பட்டது.
மைத்ரேயன்
அந்த வகையில் மயிலாப்பூரில் பாரம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த மைத்ரேயனும் தற்போது திமுகவில் இணைந்து இருக்கிறார். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் இந்த முறை மீண்டும் டெல்லிக்கு செல்லலாம் என ஆசைப்பட்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக் கொள்ளாத நிலையில் அதிருப்தியில் இருந்த அவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலமாக தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். அவருக்கும் ஏதாவது ஒரு மாநில பொறுப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது.
முக்கிய தலைவர்
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து அடுத்து கட்சி தாவ சில சீனியர்கள் தயாராக இருப்பதாக சொல்கின்றனர். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் மிகவும் செல்வாக்காக இருக்கும் ஒரு தலைவர் தற்போது திமுகவுக்கு செல்ல இருப்பதாக கூறுகின்றனர்.எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கட்சிக்கு வந்த அந்த கரூர் முக்கிய புள்ளி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டெல்லி அரசியலை கவனித்துக் கொண்டார். இந்த நிலையில் ஒரு நிகழ்வில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை அவமதித்ததால் அந்த அதிமுக புள்ளி மிகவும் அதிருப்தியில் இருக்கிறாராம். இந்த நிலையில் கோவை மண்டலத்துக்கு பொறுப்பு வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர், அந்த தலைவரிடம் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், திமுகவுக்கு வந்தால் உரிய மரியாதை மற்றும் பதவி கிடைக்கும் என பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தற்போது அந்த அதிமுக புள்ளி திமுக தரப்பில் விரைவில் இணையலாம் என சொல்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications