பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது.. அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக போலீசார் நடவடிக்கை
சென்னை: பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்திய நிலையில், பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை எனக் கூறி தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது என காவல் துறையினரிடம் தமிழிசை வாக்குவாதம் செய்தார். போலீசாரை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தொடங்கி வைத்தார்.
"தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பட்டிதொட்டி எல்லாம் மக்களிடம் இதை கொண்டு சென்று, ஒரு கோடி கையெழுத்து பெற்று, மே இறுதிக்குள் குடியரசுத் தலைவரை சந்தித்து தமிழக மக்களின் குரலாக அதை வழங்க உள்ளோம். 1965 திமுகவுக்கானது என்றால், 2025 பாஜகவுக்கானது" என அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் பூத் வாரியாக பாஜக தொண்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று கையெழுத்தை பெற இருக்கின்றனர். சமக்கல்வி இணையதளத்தில் டிஜிட்டல் வடிவில் கையெழுத்திடலாம் என அண்ணாமலை தெரிவித்தார். அதன்படி, பாஜகவினர் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அனுமதி பெறாமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய தமிழிசை, "மக்களிடம் தங்களுடைய கோரிக்கையை எடுத்து வைத்து மும்மொழிக் கொள்கை தேவை என்பதை குறித்து கையெழுத்து வாங்க இருக்கிறோம். பொதுமக்கள் பார்வையில் நாங்கள் செய்வது கரெக்ட். பாமர மக்களுக்கு மூன்று மொழி சொல்லிக் கொடுங்கள் என மிகவும் பொறுமையாக ரொம்ப அமைதியா கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் செய்வதை செய்து கொள்ளுங்கள். பொது மக்களை பார்ப்பது தவறா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
போலீசார் தொடர்ந்து கையெழுத்து பெறுவதை தடுத்ததால் பாஜகவினர், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தமிழிசை சௌந்தராஜன் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications