2024 தேர்தல் முடியட்டும். மோடி, அமித்ஷா இந்தியாவிலேயே இருக்கமாட்டாங்க..ஆ.ராசா பகீர் புதிர்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுவிட்டதாலேயே கொங்கு மண்டலத்தில் தாமரை மலர்ந்து விடும் என பாஜக கணக்கு போடுகிறது; அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின் இந்தியாவிலேயே மோடி, அமித்ஷா இருக்கமாட்டார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ஆ.ராசா காட்டமாக சாடியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து கோவையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது: நேற்றைய தினத்துக்கு முந்தைய நாள் வரும் 20-ந் தேதி கலைஞர் கோட்ட திறப்பு விழா அழைப்பிதழை தருவதற்காக பாட்னா சென்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தேன். அப்போது இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், மதச்சார்பற்ற கொள்கைகளைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் என்னிடம் தெரிவித்தார். மேலும் பாட்னாவில் நடத்த வேண்டிய அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும் என நினைத்தேன். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடத்த வேண்டும் என விரும்பினேன். ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான், இந்தியாவின் பூகோள நிலப்பரப்பில் ஏறத்தாழ மத்தியில் இருக்கிற நீங்கள் ஆளும் பீகாரில் நடத்துங்கள். அதன்பின்னைய கூட்டங்களை தமிழ்நாட்டில் நடத்தலாம் என்றார்.

கொங்கு மண்டலத்தில் தி.மு.கவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதற்கு செந்தில் பாலாஜி ஒரு காரணம் என்று எண்ணி இங்கே மிகச் சிறப்பாக செயல்பட்ட ஒரு அமைச்சரை அமலாக்கத்துறை கைது செய்து நெருக்கடி கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சொன்னேன்.. இங்கேயும் சொல்கிறேன். சிறு சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரம் தொடங்கி அனைத்து தலைவர்களையும் இத்தகைய கொடுமைக்கு ஆளாக்குகின்றனர். ஆனால் பிரதமர் மோடியின் நண்பர் அதானி, முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் அறிக்கை சொல்கிறது. இந்த விவகாரத்தில் நீங்கள் மவுனம் சாதித்தால் நீங்களும் பிராடுதான் என மோடியை பார்த்து சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்.

அப்படிப்பட்ட காட்டாட்சியை, ஊழலாட்சியை, மதவெறி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற நீங்கள், எங்கள் கொங்கு மண்டலத்திலேயே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அமைச்சர் ஒருவரை முடக்கிவிட்டால் இங்கே தாமரை மலரும் என கருதிக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு ஒன்றை சொல்லி முடிக்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறும். அந்த கூட்டத்துக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார். அதில் இந்தியாவின் பிரதமர் இருப்பார். 10க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்று கலைஞர் வாழ்க என முழக்கமிடுவர். அப்போது இந்தியாவிலேயே மோடி, அமித்ஷாக்கள் இருக்க மாட்டார்கள். அந்த இலக்கை நோக்கி பயணிப்போம். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.












Click it and Unblock the Notifications