தேவர், பள்ளர், பறையர் நிலம் பறித்து பிராமணருக்கு தந்த 'பொன்னியின் செல்வன்' ராஜராஜ சோழன்-ஆ.ராசா சூடு
சென்னை: பொன்னியின் செல்வன் என போற்றப்படுகிற ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் தேவர், பள்ளர், பறையர் நிலங்கள் பறிக்கப்பட்டு பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலங்களாக தாரைவார்க்கப்பட்ட வரலாற்றை ஆதாரங்களுடன் திமுக மூத்த தலைவர் ஆ.ராசா எம்.பி. பட்டியலிட்டுப் பேசினார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
திராவிடர் இயக்கங்களின் மேடைகளில் பேசப்படுகிற கருத்துகள் இப்போது அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றன. திராவிடர் இயக்க மேடைகளில் பல நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி பேசப்படுகிற கருத்துகள் மேடைப்பேச்சாளரின் தனிநபரின் கருத்தாக
பொய்யாக திசை திருப்பப்பட்டு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆ.ராசா நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. பகிரங்க மிரட்டல் விடுத்த இந்துத்வா நிர்வாகி அதிரடி கைது!
சூத்திரன் பேச்சு
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசி இருந்தார். மனுஸ்மிருதியை மேற்கொள்காட்டி ஆ.ராசா பேசியிருந்தார். ஆனால் தமிழக தாய்மார்களை பிறப்பின் அடிப்படையில் ஆ.ராசா இழிவுபடுத்திவிட்டதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொன்னியின் செல்வன்
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் எனப் போற்றப்படுகிற ராஜராஜ சோழன் எப்படியெல்லாம் தமிழர் நிலத்தை பறித்து பிராமணர்களுக்கு தாரைவார்த்து சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கி கொடுத்தான் எனவும் ஆ.ராசா பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆ.ராசாவின் பேச்சு விவரம்: எவ்வளவு பெரிய கொடுமை நிகழ்ந்திருக்கிறது தெரியுமா? ராஜராஜ சோழனாகட்டும்.. ராஜேந்திர சோழனாகட்டும்.. எத்தனை லட்சம் நிலங்களை சதுர்வேதிமங்கலங்களாக மாற்றி இருக்கின்றனர்.
சதுர்வேதிமங்கலம்
உ.வே.சாமிநாதய்யர் இதை எழுதி இருக்கிறார். உத்தமதானபுரம் ஊரில் சோழ அரசன் ஒருவன் தங்குகிறான். அவருக்கு வேதியர்கள்- புரோகிதர்கள் வழிகாட்டுகின்றனர். ஏகாதசி அன்றைக்கு அன்னந்தண்ணி ஆகாரம் சாப்பிடக் கூடாது.. அப்படி இருந்தால் ஆயுள் நீளும் என்கின்றனர். அந்த அரசரும் அதை கடைபிடிக்கிறார். ஆனால் உத்தமநாதபுரம் ஊரில் சோழ அரசன் தங்கியபோது தவறுதலாக வெற்றிலை பாக்கு போட்டுவிட அந்த தவறுக்கு பிராயசித்தமாக பிராமணர்களுக்கு நிலம், வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதுதான் சதுர்வேதி மங்கலம்.
தேவர், பள்ளர், பறையர் நிலம்
சதுர்வேதிமங்கலம் என்பது எது? முக்குலத்தோர், தேவர், பள்ளர், பறையர்கிட்ட இருந்து நிலத்தை பிடுங்கி நாலுவேதங்களைக் கற்ற பிராமணர்களுக்கு சதுர்வேதிமங்கலம் அமைத்து கொடுத்தனர். அப்படி ராஜராஜ சோழன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கொடுத்தான். ராஜேந்திர சோழன் கொடுத்தான். அது எல்லாம் எங்க சொத்து. ஆனால் இலவசங்கள் கூடாது என்கிறார்கள். இலவசமாக அனுபவிக்கிறதே நீங்கதான்.. நீங்க அனுபவிக்கிறது எல்லாமே இலவசம்தான். எங்கிருந்தோ வந்து இங்க வந்து உட்கார்ந்துகிட்டு இலவசத்தை பெற்றுக் கொண்டு, மதத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு; இப்ப நாங்க இலவசமாக உணவு போட்டால் இதெல்லாம் தேவையா? இலவசங்கள் கூடாது என்கின்றனர். இவ்வாறு ஆ.ராசா பேசினார். ( உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர் உத்தமதானபுரம். இந்த ஊர் பிறந்த வரலாற்றை உ.வே.சா. எழுதி இருக்கிறார். அவரே தன்னுடைய ஊர் உத்தமதானபுரம் என்பது ஒரு சர்துவேதி மங்கலம் என பதிவு செய்துள்ளார். அதனை மேற்கோள்காட்டி ஆ.ராசா பேசினார்).