பாமகவில் போட்டியிடக் கூட ஆள் இல்லையே.. ராமதாஸின் ஓபன் டாக்- மூத்த தலைவர்கள் படுஅப்செட்!
சென்னை: பாமகவில் போட்டியிடக் கூட ஆள் இல்லையே... தேர்தலில் போட்டியிட ஆளைத் தேட வேண்டும் போலிருக்கிறது... அந்தமானில் இருந்து கப்பலில் அழைத்து வந்திருப்பேன் என்றெல்லாம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படையாக பேசியிருப்பதை அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து வருகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த கூட்டங்களில் நாம் ஆண்ட பரம்பரை.. அன்புமணி தலைமையில் பாமக ஆட்சி அமைத்தாக வேண்டும்; குறைந்தது 60 எம்.எல்.ஏக்களைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார் டாக்டர் ராமதாஸ்.
கோட்டையில் பாமக கொடி பறக்கும்.. நீங்கள் ஆண்ட பரம்பரை.. அன்புமணிதான் இனி எல்லாம்.. ராமதாஸ் அட்வைஸ்
மா.செக்கள்தான் காரணம்
மேலும் சட்டசபை, உள்ளாட்சித் தேர்தலில் பாமக தோல்வியை சந்திக்க காரணமே மாவட்ட செயலாளர்கள்தான்.. உங்களால் முடியவில்லை என்றால், ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் 1 லட்சம் வாக்கு வாங்க முடியுமா என்று கேட்பேன்.. அவன் முடியும் என்று சொன்னால் அவனையே மாவட்ட செயலாளராக போட்டுக்கொள்வேன் என்றெல்லாம் ஏகத்துக்கும் கடுப்படித்தார் ராமதாஸ்.. அதேபோல் கடலூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லியிருந்தால் அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து போட்டியிட வைத்திருப்பேனே.. கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால் பதவிகளில் நீங்களே இருங்க.. என்றும் பேசியிருந்தார் ராமதாஸ்.
கட்சியில் ஆளே இல்லை
திண்டிவனத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பாமக நிர்வாகிகளை வறுத்து எடுத்ததுடன், தன்னிடமிருந்த ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டித்தீர்த்தார் டாக்டர் ராமதாஸ். தேர்தலில் போட்டியிட ஆள் தேட வேண்டும் போலிருக்கிறது... போட்டியிட கட்சியில் ஆளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவரது பேச்சு இருந்தது. இந்த ஆதங்கம் மீடியாக்களில் பரவலாக எதிரொலித்தது.
சீனியர்கள் அப்செட்
இந்த நிலையில், டாக்டர் அன்புமணியிடம் பேசும் சீனியர் பாமகவினர், அய்யா, இந்தளவுக்கு உணர்ச்சிவயப்பட்டிருக்கக்கூடாது. அவர் பேசியது நம் கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது. கட்சி பலவீனமாக இருப்பது அம்பலமானால் நம் கட்சிக்காரர்களும் சோர்ந்து போய்விடுவர்.
உணர்ச்சிவசப்பட்டால் எப்படி?
நம் சமூகமும் பாமகவை சாதாரணமாகத்தான் பார்க்கும். இது நம் கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது. அதனால், உணர்ச்சிவயப்படாமல் அய்யா இருக்க வேண்டும். அதை நீங்கள் தான் பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனராம்.