கே.சி.வீரமணி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உருளும் காங். மூத்த தலைவர் பெயர்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரது பெயரும் உருட்டப்படுகிறதாம். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனராம்.
Recommended Video
தமிழக அரசியலில் அந்த கட்சி இந்த கட்சி தனிக்கட்சி என தனி அத்தியாயம் படைத்தவர் அந்த தலைவர். தமிழக அமைச்சர் முதல் மத்திய அமைச்சர் பதவி வரை வகித்தவர்.
அந்த தலைவர் கடைசியாக கரை ஒதுங்கியது காங்கிரஸில்தான். அந்த கட்சியிலும் உச்சம் தொட்டவர். தற்போதும் டெல்லிக்கு போய் வரக் கூடியவர். தமது வாரிசையும் அரசியலுக்கு வெற்றிகரமாக கொண்டுவந்துவிட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டை வீடு
நாம் குறிப்பிடும் அந்த மூத்த தலைவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு பங்களா உள்ளது. அரசியல் வாரிசு பெயரில்தான் இந்த பங்களா உள்ளது. ஏகப்பட்ட கடனில் சிக்கித் தவித்த அந்த தலைவர் பங்களாவை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

பினாமி பெயரில் வாங்கிய கே.சி.வீரமணி
இதனைக் கேள்விப்பட்ட மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி, பினாமி ஒருவர் பெயரில் அந்த பங்களாவை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான தொகை 50:50 என்ற ரேசியோவில் கறுப்பு வெள்ளையாக கொடுக்கப்பட்டதாம். இதனையடுத்து தமது கடன் பிரச்சனையை தீர்த்திருக்கிறார் அந்த மூத்த தலைவர்.

ரெய்டில் சிக்கிய கே.சி.வீரமணி
இப்போது வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து குவித்ததாக கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழகம், பெங்களூருவில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தங்கம், ரொக்கப் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காங். தலைவர் தொடர்பு குறித்து விசாரணை
அத்துடன் சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவரின் பங்களா விவகாரம் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாம். கே.சி.வீரமணி மீதான புகாராக இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டதாம். தற்போது இந்த புகார் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு ஆளும் தலைமையும் ஓகே சொல்லி இருக்கிறதாம். இதனால் கொதித்து போய் இருக்கிறாராம் காங். மூத்த தலைவர்!












Click it and Unblock the Notifications