சென்னையில் பரபரப்பு... ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம்
Recommended Video
சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமியின் பேரன், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளரான டாக்டர் கலாநிதி, ஆற்காடு வீராசாமியின் மகனாவார். கலாநிதியின் மகனும் ஆற்காடு வீராசாமியின் பேரனுமான சித்தார்த், சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் முதலாமாண்டு சட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

சென்னை எழும்பூரில் நேற்று இரவு தனது காரில் சித்தார்த் சில நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். எழும்பூர் பாந்தியன் சாலையில் சித்தார்த் காரில் சென்ற போது, அவருக்கு முன்னே சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சித்தார்த்தின் கார் எதிர்பாராத விதமாக உதவி ஆய்வாளர் ஜெயபாலன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயபாலன், சிகிச்சைக்காக உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்து குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் தரப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள், விபத்தை ஏற்படுத்திய சித்தார்த்தின் காரை பறிமுதல் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் சித்தார்த் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இத்தகவலை கேள்விப்பட்ட ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர், பின்னர் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் முயற்சிக்கு பின்னர், காவல் நிலைய ஜாமீனில் சித்தார்த் விடுவிக்கப்பட்டார் .












Click it and Unblock the Notifications