ரூ.2000 கோடி டாஸ்மாக் பணம் முறைகேடு..ரூட் பிடித்த ஜெயக்குமார்.. செந்தில் பாலாஜி மீது பகீர் புகார்
சென்னை: டாஸ்மாக் மது விற்பனையில் அரசுக்கு வரவேண்டிய பணம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே செல்வதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். டாஸ்மாக் மது விற்பனையில் ரூ. 2000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். 20 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜியின் கைதுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்டவர்களை பிடித்து கொடுத்த என்னை கைது செய்தனர்.
என்னை அலையவிட்டு சென்னையை 2 மணி நேரம் சுற்றி காட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். மாத்திரை எடுக்க கூட விடாமல் அலைக்கழித்தனர் என்றார்.
செந்தில் பாலாஜியே விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய பின்னர் திமுகவினர் பயப்படுவது ஏன் என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவரை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் அட்மிட் செய்து பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கையை அளிக்க வேண்டும். காவல்துறையினரை எட்டி உதைக்கிறார் செந்தில் பாலாஜி அது எப்படி முடியும் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இதயத்தை யாரோ பிடித்து அமுக்குகின்றனர் அது ஏன் என்றும் கேட்டார். கடந்த 2 ஆண்டுகளில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சென்றுள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூட வைத்து விற்பனை செய்துள்ளனர். இதன் மூலமும் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பார்கள் நடத்தியதன் மூலம் அரசு கருவூலத்திற்கு வரவேண்டிய பணம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சென்றுள்ளது என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications