நான் ஜெயிச்சுட்டேன்.. எப்ப ராஜினாமா பண்ண போறீங்க சார்.. விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி!
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்
Recommended Video
சென்னை: நான் தோத்து போய்ட்டா, ராஜினாமா செய்வேன்னு சொன்னாரே அமைச்சர் விஜயபாஸ்கர்.. எப்போ ராஜினாமா செய்ய போறாரு?" என்று நேத்தே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார் செந்தில் பாலாஜி!
அரவக்குறிச்சியில் திமுக சார்பாக செந்தில்பாலாஜிதான் வேட்பாளர் என்றதுமே அதிமுக, அமமுக தரப்பினருக்கு அடிவயிற்றில் பகீர் வந்தது.
ஏனென்றால் செந்தில்பாலாஜி முன்பு யாரை கொண்டு போய் வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் காணாமலே போய்விடும் அளவுக்கு தொகுதியில் செல்வாக்கு நிறைந்தவர்!

நிர்ப்பந்தங்கள்
அதனால்தான் அதிமுக ரொம்பவே மெனக்கட்டது. காரணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி இதுவாகும். மேலும், ஒரு ஒன்றியத்திற்கு ஒரு அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் என நியமித்தார்கள். வேட்பாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எல்லோருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஏகப்பட்ட நெருக்கடிகள், நிர்ப்பந்தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு ஆளானது.

வஞ்சகம்
இதற்காகவே இந்த தொகுதிக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், அன்பழகன், உட்பட 10 அமைச்சர்கள் கொண்ட குழும் தயாரானது. இதில் செந்தில்பாலாஜியை தோற்கடிக்க உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கர் ரொம்பவே மெனக்கட்டார். "செந்தில் பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த, நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று அமைச்சர் விஜயபாஸ்கரே செய்தியாளர்கள் முன்னிலையில் ஒருமுறை கூறினார்.

ஜெராக்ஸ்
ஆனால் செந்தில்பாலாஜியை கடைசிவரை யாராலும் எதுவுமே செய்ய முடியவில்லை. திமுகவின் கடைசி நாள் பிரச்சாரத்துக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு தடைபோடப்பட்டது. 2000 ரூபாய் பணத்தை ஜெராக்ஸ் எடுத்து தருகிறார் என்று இறுதிநேரத்தில் பரபரப்பை கிளப்பினார்கள். அதிலும் ஒன்றும் செய்யவில்லை.

டெபாசிட்
அதற்காக பணப்புழக்கம் இல்லை என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது. திமுக, அதிமுக, அமமுக என எல்லாரும்தான் பணத்தை வாரி இறைத்ததாக சொல்லப்பட்டது. கடைசியில் 37,824 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். பிரச்சாரத்தின்போது, அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன் என்றும், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் சவால் விடுத்தார்.

ராஜினாமா
நேற்று ஜெயித்தவுடன் செந்தில்பாலாஜி கேட்ட முதல்கேள்வி இதுதான். செய்தியாளர்களிடம் பேசியபோது, "என்னை டெபாசிட் இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் சொன்னாரே, எப்போது ராஜினாமா செய்வார்" என்று கேள்வி எழுப்பினார். அதனால் இப்போதே உள்ளூர் அமைச்சருக்கு குடைச்சல் ஆரம்பமாகி உள்ளது!












Click it and Unblock the Notifications