காலை வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி விசுவாசம் பற்றி கிளாஸ் எடுக்கிறாரு.. செந்தில் பாலாஜி அட்டாக்!
சென்னை: அரசியல் வியாபாரி என தன்னை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்." என விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி.
தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.

துரோக கணக்கு
எடப்பாயி பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.
அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி எடப்பாடி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்” எனத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி vs செந்தில் பாலாஜி கருத்து மோதல்
முன்னதாக, திமுக ஆட்சி இன்னும் 13 அமாவாசைகள் தான் இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதை விமர்சித்து கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார் செந்தில் பாலாஜி. “ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டு காலத்தில் அமாவாசையை உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன.” என விமர்சித்திருந்தார்.
அதற்கு பதில் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் மதுபான விற்பனை மூலமாக லாபத்தை விட திமுக பொறுப்பேற்ற பிறகு 23 லிருந்து 25 ஆம் ஆண்டு வரை மதுபானம் 29 ஆயிரம் கோடி கூடுதலாக அதிகரித்து உள்ளது.
செந்தில் பாலாஜியை தாக்கிய எடப்பாடி
செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி.
இவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான விசுவாசி என்றால் ஒரே கட்சியில் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பித்த போது அதிமுகவில் சேர்ந்தேன். அந்த கட்சியை நேசித்தேன். அதனால் எனக்கு பொதுச் செயலாளர் என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையை கருதி வேடந்தாங்கல் பறவைகள் போன்று அவ்வப்போது வந்து செல்பவர்கள். இவர்கள் எல்லாம் எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது.” என்று விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications