வென்டிலேட்டரில் சுவாசிக்கும் செந்தில் பாலாஜி.. பைபாஸுக்கு பின் எப்படி இருக்கிறார்? புதிய அப்டேட்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது வென்டிலேட்டரில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கு ஆஞ்சியோ கிராம் எடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்தில் 3 முக்கிய குழாய்களில் அடைப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதிலும் ஒன்று 90 சதவீதம் அடைப்பு இருப்பதால் அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனிடையே அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால் அவரை 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதால் அவரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மனைவி மேகலா நீதிமன்றத்தை நாடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவரிடம் முக்கிய கேள்விகளை கேட்க அமலாக்கத் துறை 15 நாட்கள் காவல் கேட்டது. ஆனால் நீதிமன்றமோ பல நிபந்தனைகளுடன 8 நாட்கள் காவல் கொடுத்தது. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய எந்தநேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்ததால் அவரிடம் நீதிமன்ற உத்தரவை மீறி அமலாக்கத் துறையால் விசாரணை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் நேற்றைய தினம் 5 மணி நேரமாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய இதயத்தில் இருந்த அடைப்புகள் எடுக்கப்பட்டதாகவும் அங்கு ஒரு ஸ்டென்ட் கருவி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார் என்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளார். 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார். தற்போது மயக்க மருந்து முழுவதும் செயலிழந்து அவருக்கு வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications