தேர்தலுக்கும் வெளியே வர முடியாமல் ‘லாக்’.. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 30வது முறையாக நீட்டிப்பு!
சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 30வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 28 அதாவது இன்று வரை நீட்டித்து ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதனால் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் நான்காம் தேதி நீட்டித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். இதன்மூலம் 30 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் 3 வாரங்களில் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் இடையே நிலவி வருகிறது. ஆனால், மீண்டும் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications