Senthil Balaji: கரூர் சம்பவம்.. 6 மணி நேரம் நடந்த விசாரணை.. சிபிஐ கேட்டது என்ன? செந்தில் பாலாஜி கொடுத்த பதில்
சென்னை: கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆன திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "6 மணி நேரம் விசாரணை நடந்தது.. என்னென்ன கேள்விகள் கேட்டனர் என்பதை பொதுவெளியில் சொன்னால் நன்றாக இருக்காது. மீண்டும் ஆஜராக வேண்டுமா என்பது தெரியவில்லை" என்று கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் வழங்கியது. இந்த சம்மனை ஏற்று இன்று செந்தில் பாலாஜி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். சுமார் 6 மணி நேரம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே சென்னை திரும்பினார்.

செந்தில் பாலாஜி பதில்
சென்னை விமான நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி கூறியதாவது:- சாட்சிகள் என்ற அடிப்படையில் அங்கு நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்விகளை முன்வைத்தார்கள். அந்த கேள்விகள் என்ன என்பதை பொதுவெளியில் சொன்னால் நன்றாக இருக்காது.
விசாரணை ஆணையத்தின் முன்பு வைக்கப்பட்ட கேள்வி, பதில்கள். ஆகையால் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியிருக்கிறேன். 10.30 மணிக்கு சிபிஐ வர சொல்லியிருந்தார்கள். நான் 10.15 மணிக்கு போயிருந்தேன். கேள்விகள் எண்ணிக்கை என என்று நான் பார்க்கவில்லை. விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலும் சொன்னால் சரியாக இருக்காது.
மறுபடியும் ஆஜராக வேண்டுமா?
சிபிஐக்கு எதாவது சந்தேகங்கள் இருந்து இருக்கலாம். அந்த சந்தேகங்கள் அடிப்படையில் அழைத்து இருக்கலாம். அங்கே களத்தில் இருந்து பணியாற்றியதால் அதை பொறுப்பாக எடுத்துக்கொண்டு, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கியிருக்கிறேன். மறுபடியும் ஆஜராக வேண்டுமா என்று கேட்கிறீர்கள். இன்று அது சம்மந்தமாக எதுவும் கேட்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். என்று கூறினார்.
செந்தில் பாலாஜிக்கு சம்மன் ஏன்?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இதுவரை மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது. தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோரிடமும் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பத்து ரூபாய் என்று பாடத்தொடங்கியதும்
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை நோக்கி தவெக குற்றச்சாட்டுகளை அடுக்கியது. விஜய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடத்தொடங்கியதும் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதாகவும், திருச்சி, நாமக்கல் என எங்கும் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் செல்லாத போலீசார், கரூரில் மட்டும் மிகவும் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு முன்னதாக மருத்துவமனைக்குச் செந்தில் பாலாஜி நேரில் சென்றார் எனவும் தவெக குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி தரப்பிடம் விளக்கம் கேட்க சிபிஐ அவருக்கும் சம்மன் அனுப்பியது. இதன்படி, 17 ஆம் தேதி செந்தில் பாலாஜி சிபிஐ முன்பு ஆஜரானார். சுமார் 6 மணி நேரம் சிபிஐ செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியது.












Click it and Unblock the Notifications