காவேரி மருத்துவமனையில் அமலாக்க துறை.. காவலில் எடுத்த படிவத்தில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுப்பு?
சென்னை: அமலாக்கத் துறை தன்னை காவலில் எடுத்ததற்கான படிவத்தில் கையெழுத்திட அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 90 சதவீதம் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அவரை மருத்துவமனையில் வைத்தே அமலாக்கத் துறை கைது செய்தது. இதனிடையே அவரால் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாததால் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்தார். இதையடுத்து அவரை ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவிற்கேற்ப காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தமிழக மருத்துவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றும் செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போது செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நேற்று நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து அவரை காவலில் எடுத்ததற்கான படிவத்தில் கையெழுத்து பெற நீதிமன்றக் குழுவுடன் அமலாக்கத் துறை காவேரி மருத்துவமனைக்கு சென்றது. காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ள அமலாக்கத் துறையிடம் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. உடல்நிலையை காரணம்காட்டி நீதிமன்ற படிவத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திடவில்லை என தெரிகிறது.












Click it and Unblock the Notifications