மருத்துவமனைக்கு நேரில் வந்த முதல்வர்..எழுந்து உட்கார்ந்த செந்தில் பாலாஜி..பேசியது என்ன?
சென்னை: நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சுயநினைவின்றி இருப்பதாக கூறப்பட்ட செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் எழுந்து பேசியுள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி ஆறுதல் கூறிய புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நெஞ்சுவலி ஏற்படவே அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் , கே.என். நேரு , சேகர்பாபு உள்ளிட்டோர் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்து சென்றனர்.
செந்தில் பாலாஜி கண்களை கூட திறக்க முடியாத நிலையில் சுயநினைவு அற்று படுத்திருப்பதாக அமைச்சர்கள் பலரும் செய்தியாளர்களிடம் கூறினர். இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளி வைத்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் தோளை தொட்டு ஆறுதலாக பேசினார். முதல்வர் நேரில் வந்ததை பார்த்த செந்தில் பாலாஜி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து பேசினார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது என்றும் 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications